குவாஹாட்டி: இந்திய அணி உடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி நிதானமாக ஆடி முதல் நாளில் 247 ரன்கள் எடுத்தது.
தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்திய அணி உடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அந்த அணி தற்போது விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இந்நிலையில், சனிக்கிழமை அன்று குவாஹாட்டியில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்காக இன்னிங்ஸை தொடங்கிய மார்க்ரம் மற்றும் ரிக்கல்டன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மார்க்ரம் 38, ரிக்கல்டன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மூன்றாவது விக்கெட்டுக்கு ஸ்டப்ஸ் மற்றும் பவுமா இணைந்து 84 ரன்கள் எடுத்தனர். இது அந்த அணிக்கு சிறந்த தொடக்கமாக அமைந்தது. ஸ்டப்ஸ் 49 மற்றும் பவுமா 41 ரன்களில் வெளியேறினர். வியான் முல்டர் 13, டி சோர்ஸி 28 ரன்களில் ஆட்டமிழந்தனர். செனுரன் முனுசாமி 25, கைல் வெர்ரெய்ன் 1 ரன் உடனும் களத்தில் உள்ளனர்.
முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி, 81.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. ஓவருக்கு 3.02 ரன்கள் என தென் ஆப்பிரிக்க அணி நிதானமாக இன்னிங்ஸை அணுகி உள்ளது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 17 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்திருந்தார் அவர். ஜடேஜா, சிராஜ், பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.