இந்தியாவின் ஜண்டு குமார்
கிளாஸ்கோ: 23-வது காமன்வெல்த் விளையாட்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவருக்கான பாரா வலுதூக்குதல் ஹெவிவெயிட் பிரிவில் இந்தியாவின் ஜண்டு குமார் 130.9 புள்ளிகளை குவித்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
நடப்பு தொடரில் இந்தியாவின் முதல் பதக்கமாக இது அமைந்தது. ஜண்டு குமார் 181 மற்றும் 190 கிலோ எடையை வெற்றிகரமாக தூக்கினார். இறுதி முயற்சியில் 196 கிலோ எடையை அவரால் தூக்க முடியாமல் போனது. மற்றொரு இந்திய வீரரான சுதிர் 114.1 புள்ளிகளுடன் 6-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். நைஜீரியாவின் இத்ரிஸ் ரிலுவான் 132.8 புள்ளிகளுடன் தங்க பதக்கமும், மேத்யூ ஹார்டிங் 131 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
ஜண்டு குமார் கூறும்போது, “என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. நாட்டுக்கு இது முதல் பதக்கம் என்பதால் மிகவும் முக்கியமானது. பதக்க மேட்டையில் நாட்டின் தேசியக் கொடியைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது’ என்றார்.
யார் இந்த ஜண்டு குமார்?
பிஹாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஹர்னாட் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜண்டு குமார். ஐந்து வயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட பிறகு, தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக பெற்றோருக்குக் காய்கறி விற்க உதவி வந்துள்ளார்.
ஜண்டு குமார் ஆரம்பத்தில் குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளில் ஈடுபடுவதற்கு முன்பு, தனது பலத்தைப் பெருக்குவதற்காக 2010 மற்றும் 2012-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் எடை பயிற்சியைத் தொடங்கி உள்ளார். இதில் ஈடுபாடு அதிகமானதை தொடர்ந்து பாரா வலுதூக்குதல் விளையாட்டை நோக்கி தனது பாதையை கட்டமைத்து தற்போது இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்துள்ளார்.
மகளிருக்கான ஹெவிவெயிட் இறுதிப்போட்டியில் கஸ்தூரி ராஜாமணி தனது மூன்று முயற்சிகளிலுமே தோல்வியடைந்தார். மகளிருக்கான லைட்வெயிட் இறுதிப்போட்டியில் ஜஸ்ப்ரீத் கவுர் மற்றும் சுமன் தேவி ஆகியோரால் பதக்கங்களை வெல்ல முடியாமல் போனது.
வீல்சேர் கூடைப்பந்து
மகளிருக்கான வீல்சேர் 3x3 கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி 1-16 என்ற புள்ளிகள் கணக்கில் வேல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.
நீச்சலில் ஏமாற்றம்
நீச்சலில் ஆடவருக்கான 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவு ஹீட்ஸில் இந்தியாவின் தக்ஷன் சசிகுமார் பந்தய தூரத்தை 3:58.09 விநாடிகளில் கடந்து 15-வது இடத்தையும், ஆர்யன் நேஹ்ரா 4:00.26 விநாடிகளில் கடந்து 16-வது இடத்தையும் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். இந்த பிரிவில் மொத்தம் 27 பேர் கலந்து கொண்டனர்.
குத்துச்சண்டையில் சச்சின் சிவாச் அசத்தல்
ஆடவருக்கான குத்துச்சண்டை 55 கிலோ எடைப் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சச்சின் சிவாச், கனடாவின் கியோமா அல்-அஹ்மதியாவை எதிர்த்து விளையாடினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்பெயினில் நடைபெற்ற பாக்சம் தொடரிலும், கடந்த ஆண்டு கஜகஸ்தானில் நடைபெற்ற உலகக் கோப்பையிலும் அல்-அஹ்மதியாவை சச்சின் சிவாச் தோற்கடித்திருந்தார். இதனால் இம்முறை இவர்களுக்கு இடையிலான மோதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதில் சச்சின் சிவாச் மீண்டும் ஒரு முறை தனது அனுபவத்தால் ஆதிக்கம் செலுத்தி ஸ்பிளிட் முடிவின்படி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். 26 வயதாகும் சச்சின் சிவாச் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இங்கிலாந்தின் வில்லியம் ஹெவிட்டுடன் மோதுகிறார்.
லான் பவுல்: அரை இறுதி வாய்ப்பு தக்கவைப்பு
லான் பவுல் போட்டியில் மகளிர் அணிகள் பிரிவில் இந்தியாவின் ரூபா ராணி திர்கே, பிங்கி சிங் ஜோடியானது டோங்கா அணியின் பாரிஸ் பேக்கர், மிலிகா நாதன் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை இந்திய ஜோடி 5-2 என வென்றது. 2-வது செட்டை டோங்கா ஜோடி 6-4 என கைப்பற்றியது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க நடத்தப்பட்ட டை பிரேக்கரில் இந்திய ஜோடி 2-0 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
ஜிம்னாஸ்டிக்ஸில் தபான் முன்னேற்றம்
ஆடவருக்கான ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்கில் இந்தியாவின் தபான் மொகந்தி 17-வது இடத்தையும், யோகேஷ்வர் சிங் 18-வது இடத்தையும் பிடித்து ஆல் ரவுண்ட் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். தபான் மொகந்தி 71.700 புள்ளிகளையும், யோகேஷ்வர் சிங் 71.400 புள்ளிகளையும் பெற்று 24 பேர் பங்கேற்கும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆடவருக்கான அணிகள் பிரிவில் இந்தியா 208.550 புள்ளிகள் பெற்று 7-வது இடம் பிடித்தது. கனடா அணி 241.400 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றது. இங்கிலாந்து (238.250) வெள்ளிப் பதக்கமும், ஆஸ்திரேலியா (235.650) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றியது.