பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 9-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 22-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்கயா, 28-ம் நிலை வீராங்கனையான ஆஸ்திரியாவின் அனஸ்டசியா பொடபோவாவை எதிர்த்து விளையாடினார்.
2 மணி நேரம் 49 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கலின்ஸ்கயா 6-4, 2-6, 7-6(10-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். 27 வயதான கலின்ஸ்கயா கிராண்ட் ஸ்லாம் தொடரில் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் 2024-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கலின்ஸ்கயா கால் இறுதி சுற்றில் கால்பதித்து இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ் 7-6 (7-3), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் 106-ம் நிலை வீரரான நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜாங்கை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
அதேவேளையில் 11-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவ் 3-6, 6-7 (6-8), 6-4, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் போராடி 26-ம் நிலை வீரரான செக் குடியரசின் ஜாக்குப் மென்சிக்கிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 45 நிமிடங்கள் நடைபெற்றது. மற்றொரு ஆட்டத்தில் 28-ம் நிலை வீரரான பிரேசிலின் ஜோவோ ஃபொன்சேகா 7-5, 7-6 (10-8), 5-7, 6-2 என்ற செட் கணக்கில் 15-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூடை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தார்.