விளையாட்டு

எம்பாப்பே நூறு சதவீதம் ஆட்டத்துக்கு தயார்: பிரான்ஸ் பயிற்சியாளர் நம்பிக்கை

வேட்டையன்

டல்லாஸ்: நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி விளையாட எம்பாப்பே நூறு சதவீதம் தயாராக இருப்பதாக பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2018-ல் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2022-ல் இரண்டாம் இடம் பிடித்தது. நடப்பு தொடரில் அறையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இதில் ஸ்பெயின் அணி உடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.

கடந்த 2012 முதல் பிரான்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக டிடியர் டெஷாம்ப்ஸ் செயல்பட்டு வருகிறார். கடந்த 1998-ல் அவரது தலைமையிலான பிரான்ஸ் அணி, உலகக் கோப்பை பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

எம்பாப்பே காயம்?

காலிறுதி ஆட்டத்தில் மொராக்கோ அணியின் டிஃபென்டரால் பலமாகத் தாக்கப்பட்ட பிரான்ஸ் அணியின் நட்சத்திரமான கிலியன் எம்பாப்பே ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் மைதானத்தில் கீழே விழுந்தார். அடுத்த நிமிடமே அவர் வெளியேற்றப்பட்டு மாற்று வீரர் களம் இறக்கப்பட்டார்.

பின்னர் அவர், தனது வலது கணுக்காலில் ஐஸ் பேக் வைத்தபடி மாற்று வீரர்களின் பெஞ்ச்சில் அமர்ந்திருந்தார். எனினும் போட்டி முடிவடைந்த பின்னர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இந்த சூழலில் எம்பாப்பேவின் உடற்திறன் குறித்து டிடியர் டெஷாம்ப்ஸ் பேசியுள்ளார்.

“கோபா வெர்டே அணி உடனான ஸ்பெயின் ஆட்டத்தை தவிர்த்து பார்த்தால் இந்த தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அவர்கள் இந்த தொடரில் பட்டம் வெல்லும் பேவரைட் அணிகளில் ஒன்று என்பதை வெளிப்படுத்தி உள்ளனர். வலுவான தடுப்பாட்டமும், அதற்கு நிகரான தாக்குதல் ஆட்டமும் ஆடும் திறன் கொண்ட அணி. கடந்த ஆறு ஆட்டங்களில் அவர்கள் ஒரே ஒரு கோலை மட்டுமே எதிரணிக்கு விட்டுக் கொடுத்துள்ளனர்.

எப்படியும் இந்த ஆட்டத்தில் பந்தை யார் கட்டுப்படுத்துவது என்பதில் இரு அணிகளுக்கு இடையிலும் கடுமையான போட்டி இருக்கும்.

எம்பாப்பே நூறு சதவீதம் இந்த ஆட்டத்துக்கு தயாராக உள்ளார். அவரது உடற்திறன் மேட்ச் பிட்னஸ் உடன் உள்ளது. அணிக்கு வெளியில் இருந்து எழும் தேவையற்ற அழுத்தங்களில் நாங்கள் கவனம் செலுத்த விரும்பவில்லை” என்று டிடியர் டெஷாம்ப்ஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT