பியூனஸ் அயர்ஸ்: சுமார் இரண்டு தசாப்தங்களாக அர்ஜெண்டினா தேசிய அணிக்காக விளையாடி வந்த நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸி, தனது 39-வது வயதில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
6 உலகக்கோப்பைத் தொடர்களில் பங்கேற்றுள்ள மெஸ்ஸி, 2022-ல் கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பையில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும், 2026-ம் ஆண்டு உலகக்கோப்பையில் அர்ஜெண்டினாவை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றிருந்தார் மெஸ்ஸி.
இந்நிலையில் தனது ஓய்வு முடிவு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெஸ்ஸி வெளியிட்டுள்ள பதிவில், “ஓய்வு முடிவை எடுப்பது எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது. இன்னமும் அந்த வலி என் மனதை ஆழமாகத் துளைக்கிறது. ஆனால், விடைபெறுவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். நாங்கள் அனைத்துக் கோப்பைகளையும் வென்ற கடந்த சில ஆண்டுகளில் மட்டுமல்ல, அதற்கு முன்பிருந்த கடினமான காலங்களிலும் கூட இந்த ஜெர்சிக்காக மைதானத்தில் எனது நூறு சதவீத உழைப்பை அளித்திருக்கிறேன். எப்போதும் களத்தில் உங்களுக்காகவே போராடினேன், உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதே எனது ஒரே இலக்காக இருந்தது.
எனக்கான காலம் அதிகமில்லை. வாழ்க்கையின் வெவ்வேறு அத்தியாயங்கள் முடிவுக்கு வந்துகொண்டிருக்கின்றன. அதில் இந்த அத்தியாயத்தின் முடிவு என் மனதை மிகவும் காயப்படுத்துகிறது. தேசிய அணியின் ஒரு அங்கமாக இருப்பதை நான் நேசித்தேன், நேசிக்கிறேன், எப்போதும் நேசிப்பேன். என்னிடம் இருந்த அனைத்தையும் அணிக்குக் கொடுத்துவிட்டேன். இனி அளிப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை. மேலும், இங்கு விளையாடத் தகுதியான சிறந்த இளம் வீரர்கள் பலரும் அணிக்குள் வந்துகொண்டிருக்கிறார்கள்.
கடந்த 20 ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த அன்புக்கு நன்றி. மைதானத்துக்கு உள்ளிருந்து உங்கள் குரலைக் கேட்பதை இனி நான் இழப்பேன். இனிமேல் நானும் உங்களில் ஒருவனாக மாறுகிறேன். நல்ல நேரத்திலும், குறிப்பாகக் கடினமான நேரங்களிலும் மைதானத்துக்கு வெளியே இருந்து எப்போதும் அணிக்கு என் ஆதரவைத் தருவேன். இந்த அழகான, அதே சமயம் சவால்கள் நிறைந்த பயணத்தில் எப்போதும் என்னுடன் துணைநின்ற என் குடும்பத்தினருக்கு நன்றி. இந்த நீண்ட பயணத்தை என்னுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த அனைத்துப் பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு என் நன்றிகள். மறக்க முடியாத நினைவுகளையும் அரிய தருணங்களையும் என் நெஞ்சில் ஏந்திச் செல்கிறேன்.
நாம் ஒரு காலத்தில் கனவு கண்ட தருணங்களை, என் சக வீரர்களுடன் இணைந்து உங்களுக்கு வழங்கிவிட்டேன் என்ற மன அமைதியோடும் பெருமிதத்தோடும் விடைபெறுகிறேன். உங்கள் அனைவருடனும் இணைந்து இவற்றையெல்லாம் அனுபவித்தது ஒரு சிலிர்ப்பான உணர்வு. உங்கள் மீது மிகுந்த அன்பு கொள்கிறேன்! என்னை ஓர் அர்ஜென்டினாவாசியாகப் படைத்த இறைவனுக்கு நன்றி வாமோஸ் அர்ஜென்டினா (வாழ்க அர்ஜென்டினா!).
இறுதிப்போட்டி முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜூலை 21 அன்றே இந்த வரிகளை எழுதிவிட்டேன். எனது தந்தை மரணத்துக்குப் பிறகு, எனது இந்த முடிவில் நான் முன்பை விட மிக உறுதியாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அர்ஜெண்டினா அணிக்காக 2005-ம் ஆண்டு அறிமுகமான லயோனல் மெஸ்ஸி 207போட்டிகளில் விளையாடி 125 கோல்களை அடித்துள்ளார்.