சான் பிரான்சிஸ்கோ: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் பி பிரிவில் கத்தார், சுவிட்சர்லாந்து அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
இந்த ஆட்டம் சான்பிரான்சிஸ்கோவிலுள்ள லெவிஸ் மைதானத்தில் நேற்று அதிகாலை 12.30 மணிக்கு நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 17-வது நிமிடத்திலேயே சுவிட்சர்லாந்து வீரர் பிரீல் எம்போலா பெனால்டி வாய்ப்பு மூலம் கோலடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெறச் செய்தார்.
சுவிட்சர்லாந்து வீரர் ரெமோ ஃபுரூலரிடம், கத்தார் கோல்கீப்பர் மமூத் அபுனாடா செய்த ஃபவுல் காரணமாக பெனல்டி வாய்ப்பு சுவிட்சர்லாந்துக்குக் கிடைத்தது. இதை அருமையாக பயன்படுத்தி கோலடித்தார் பிரீல் எம்போலா.
முதல் பாதி வரை 1-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்து முன்னிலையிலேயே இருந்தது. 2-வது பாதியில் கத்தார் அணி வீரர்கள் கோலடிக்க தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அவர்களது முயற்சி வெற்றி பெற வில்லை. 2-வது பாதி முடிவடைந்த நிலையில் காயங்களால் ஏற்பட்ட இழப்பீடுக்கு வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் கத்தார் கேப்டன் பவுலேம் கவுக்கி கோல் வலை அருகே வந்தார்.
அப்போது கத்தாரின் ஹோம் அல் அமீன் கிராஸ் செய்து கொடுத்த பந்தை தலையால் முட்டி கோலாக்க கவுக்கி முயன்றார். ஆனால், அவருக்கு முன் இருந்த சுவிட்சர்லாந்து வீரர் மிரோ முஹைமின் தலையில் பந்து பட்டு சுய கோலாக மாறியது. மிரோ முஹைம் அடித்த சுய கோலால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது.