ஹவுஸ்டன்: உலகக் கோப்பை கால்பந்து கால் இறுதிச் சுற்றில் பிரான்ஸ் அணியுடன் மொராக்கோ மோதவுள்ளது. ஹவுஸ்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கால் இறுதிக்கு முந்தையச் சுற்று ஆட்டத்தில் மொராக்கோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் கனடா அணியைத் தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறியது.
மொராக்கோ அணி சார்பில் அஸிடைன் அவுனாஹி 50, 82-வது நிமிடங்களில் 2 கோல்கள் அடித்தார். மொராக்கோவின் மற்றொரு வீரர் சவுபியான் ராஹிமி 90+8-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார். கோலடிக்க எவ்வளவோ முயற்சி செய்தும் கனடா அணியால் இறுதி வரை அதில் வெற்றி பெற முடியவில்லை. ஆட்டம் முடியும் வரை இந்நிலை நீடிக்கவே மொராக்கோ 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.
ஜூலை 10-ல் மோதல்
ஜூலை 10-ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் பலம்வாயந்த பிரான்ஸ் அணியைச் சந்திக்கவுள்ளது மொராக்கோ. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தின் ஃபாக்ஸ்பரோவிலுள்ள கில்லெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் பிரான்ஸ், மொராக்கோ அணிகள் அரையிறுதியில் மோதின. இதில் பிரான்ஸ் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இருந்தது. இந்த தோல்விக்கு மொராக்கோ அணி தற்போது பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.