பிலடெல்பியா: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள லிங்கன் ஃபைனான்சியல் ஃபீல்டு மைதானத்தில் நேற்று ‘ஐ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் - இராக் அணிகள் மோதின.
14-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி முதல் கோலை அடித்தது. வலது பக்கத்தில் இருந்து ஒலிஸேவிடம் இருந்து பந்தைப் பெற்று நட்சத்திர வீரரான கிலியன் எம்பாப்பே அடித்த மின்னல் வேக ஷாட் கோல் வலையை துளைத்தது. தனது 100-வது ஆட்டத்தில் எம்பாப்வே அடித்த இந்த கோலால் பிரான்ஸ் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
54-வது நிமிடத்தில் இராக் அணியின் டிஃபெண்டரிடமிருந்து வந்த ஒரு சுமாரான ஷார்ட் கோல்-கிக்கை கோல்கீப்பர் பாசில் சரியாகக் கையாளாமல் தடுமாறினார். அதைச் சாதகமாக்கிக் கொண்ட பிரான்ஸ் வீரர்கள், பந்தை லாவகமாகப் பறித்து, உஸ்மான் டெம்பேலேவிடம் கொடுத்தனர். அவர். அதை நேர்த்தியாக எம்பாப்பேயை நோக்கித் தட்டிவிட, எம்பாப்பே எவ்வித சிரமமும் இன்றி பந்தை கோல் வலைக்குள் தள்ளி அசத்தினார். இதனால் பிரான்ஸ் அணி 2-0 என முன்னிலை வகித்தார்.
66-வது நிமிடத்தில் வலது பக்கத்தில் ஒலிஸே மிக நேர்த்தியாகப் பந்தைச் செலுத்தி டெம்பேலேவை நோக்கி நகர்த்த, அதை மின்னல் வேகத்தில் வாங்கிய அவர், கோல்கீப்பர் பாசிலைத் தாண்டி, கோல் வலையின் இடது கார்னரை நோக்கி திணித்தார். இதனால் பிரான்ஸ் அணி 3-0 என வலுவான முன்னிலையை நோக்கி நகர்ந்தது. கடைசி வரை போராடிய போதிலும் இராக் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது. முடிவில் பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பிரான்ஸ் அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் செனகலை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இராக் அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது.
2 மணி நேரம் தாமதம்
இராக் அணிக்கு எதிரான ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி 1-0 என முன்னிலை பெற்றிருந்த நிலையில் மழை பெய்தது. எனினும் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. முதல் பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில் பலத்த மழையும் இடியுடன் கூடிய புயலும் வந்ததால் ஆட்டம் தடைபட்டது.
பலத்த மழை கொட்டித் தீர்த்ததால், ரசிகர்கள் அனைவரும் மைதானத்தின் உள்பகுதியில் பால்கனிகளிலும் தஞ்சமடைந்தனர். நிலைமை சீரடைந்த பின்னர் சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் ஆட்டம் மீண்டும் நடைபெற்றது.
மிரோஸ்லாவ் சாதனை சமன்
பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரரான 27 வயதாகும் கிலியன் எம்பாப்பே, இராக் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸ் (16 கோல்கள்) சாதனையை சமன் செய்தார்.
அதேவேளையில் பிரேசில் ஜாம்பவான் ரொனால்டோவின் (15 கோல்கள்) சாதனையை முறியடித்தார். இந்த வகை சாதனையில் அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி 18 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.