கன்சாஸ் சிட்டி: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இ பிரிவில் குராசாவோ, ஈக்வடார் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் தனது முதலாவது புள்ளியை குராசாவோ பெற்றுள்ளது.
இந்த ஆட்டம் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கன்சாஸ் சிட்டியிலுள்ள ஆரோஹெட் மைதானத்தில் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் குராசாவோ, ஜெர்மனியுடன் மோதியது. இதில் 7-1 என்ற கணக்கில் ஜெர்மனியுடன் படுதோல்வியை குராசாவோ அடைந்திருந்த நிலையில், 2-வது ஆட்டத்தில் வெற்றி பெறும் நோக்கில் அந்த அணி களமிறங்கியது. இரு அணி வீரர்களும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி கோலடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களது கோலடிக்கும் முயற்சிக்கு பலன் கிட்டவில்லை.
ஈக்வடார் அணியின் முன்கள வீரர்கள் பலமுறை கோல்கம்பத்தை நோக்கி பந்தை செலுத்தினர். ஆனால் குராசாவோ கோல்கீப்பர் எலாம் ரூம் அவற்றை அற்புதமாகத் தடுத்தார். முதல் பாதி வரை எந்த அணிகளும் கோலடிக்கவில்லை. இதையடுத்து 2-வது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். ஈக்வடார் அணி வீரர்கள் பல முறை கோல் வலையை நோக்கி பந்துகளைச் செலுத்தினர். ஆனால் அவை அனைத்தையுமே அற்புதமாக தடுத்தார் எலாய் ரூம்.
இறுதியில் ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. குராசாவோ கோல்கீப்பர் எலாய் ரூம், 15 முறை கோல்கள் அடிப்பதைத் தடுத்து சாதனை புரிந்தார். கூடுதல் நேரம் இல்லாத ஒரு உலகக் கோப்பை கால்பந்து லீக் போட்டியில், 1966-ம் ஆண்டுக்குப் பிறகு எந்தவொரு கோல்கீப்பரும் செய்ததிலேயே, எலாய் ரூம் 15 முறை கோல்களைத் தடுத்ததே சாதனையாக அமைந்துள்ளது.
இந்த டிராவின் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது. இதையடுத்து குராசாவோ அணி உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் முதன்முறையாக ஒரு புள்ளியைப் பெற்று சாதனை படைத்துள்ளது.வரும் 26-ம் தேதி ஈக்வடார், ஜெர்மனியுடன் மோதவுள்ளது, அதே நேரத்தில் குராசாவோ, ஐவரி கோஸ்ட் அணியை எதிர்கொள்கிறது.