பிரிஸ்பன்: இடது முழங்கால் பகுதியில் காயம் அடைந்த இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட், ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி முதல் 2 ஆட்டங்களிலும் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணி தொடரில் 0-2 என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது.
3-வது டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி அடிலெய்டில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இடது முழங்கால் பகுதியில் காயம் அடைந்த இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர் மார்க் வுட், ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர், 11 ஓவர்களை மட்டுமே வீசிய நிலையில் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. 2-வது டெஸ்டில் காயம் காரணமாக மார்க் வுட் களமிறக்கப்படவில்லை.
அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியில் மேட் ஃபிஷர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஃபிஷர் கடந்த 2022-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக களமிறங்கியிருந்தார். அதன் பின்னர் தற்போதுதான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.