மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் மும்பை இந்தியன்ஸ் அதிகாரபூர்வப் பக்கத்தைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டதாக கூறப்பட்ட செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்தத் தகவல் முற்றிலும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.
ஹர்திக் பாண்டியா இன்னும் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரபூர்வப் பக்கத்தைப் பின்தொடர்ந்து வருகிறார். அவர் பின்தொடரும் 151 கணக்குகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒன்றாக உள்ளது. மேலும், அந்த அணியுடன் இணைந்து அவர் வெளியிட்ட வீடியோக்கள் மற்றும் பதிவுகள் எதுவும் நீக்கப்படவில்லை. அவை அனைத்தும் அவரது பக்கத்தில் இன்னும் உள்ளன.
வதந்திக்கான பின்னணி
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 11 போட்டிகளில் 8-ல் தோல்வியடைந்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டது. ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மற்றும் அவரது தனிப்பட்ட ஃபார்ம் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், முதுகு வலி காரணமாக அவர் கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை.
அணியின் தொடர் தோல்விகள் மற்றும் தலைமை மாற்றம் குறித்த விவாதங்களே இத்தகைய வதந்திகள் பரவ முக்கியக் காரணமாக அமைந்தன. ரோஹித் சர்மாவின் தலைமைத்துவத்தோடு ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடுகள் ஒப்பிடப்படுவதால், மும்பை ரசிகர்கள் மத்தியில் ஒருவித அதிருப்தி நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அணி தோல்வியடைந்த போதிலும், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சிக்கு மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இன்னும் முழு ஆதரவை அளித்து வருவதாகத் தெரிகிறது. எனினும் சமூக வலைதளங்களில் போலியான ஸ்கிரீன்ஷாட்டுகள் பரவி வருகின்றன. அணியின் உத்திகளில் மாற்றம் கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் நிர்வாகம் இருந்தாலும், ஹர்திக் பாண்டியாவுடனான அதிகாரபூர்வ உறவில் எந்தப் பிளவும் ஏற்படவில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது.