தோனி கால் பின்பகுதி தசை காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தின் முதல் இரண்டு வாரங்களில் விளையாட முடியாமல் இருந்த நிலையில், அவர் மீண்டும் களமிறங்குவது மேலும் தாமதமாகும் என்று தெரிகிறது. இன்னும் அவர் மேட்ச் ஃபிட் ஆகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் 28 அன்று, சீசன் தொடக்க நாளில், சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தோனி “முதல் இரண்டு வாரங்களுக்கு விளையாட மாட்டார்” என்றும், அவர் புனர் சிகிச்சை மேற்கொள்வார் என்றும் தெரிவித்திருந்தது. தற்போது அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவர், முழுமையான பயிற்சிக்கு இன்னும் திரும்பவில்லை; தற்சமயம் throwdown பயிற்சியிலேயே ஈடுபட்டு வருகிறார்.
கேகேஆர் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சியின் இறுதியில் தோனி குறுகிய நேரம் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர் முழு வேகத்தில் விளையாடாமல், பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி உள்ளிட்ட பயிற்சி குழுவினரிடமிருந்து throwdown பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார்.
அதில் இரண்டு பந்துகளை எல்லைக்கோட்டுக்கு வெளியே அடித்து அனுப்பினார். ஆனால் பேட்டிங் செய்த தோனி விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடவில்லை. இது அவர் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை என்பதைக் காட்டுகிறது.
கடந்த சில சீசன்களில், தோனி ஒரு இன்னிங்ஸில் 10-12 பந்துகளை மட்டுமே சந்தித்து, எல்லா பந்துகளையும் சிக்சர்களாக மாற்ற முயன்று கொண்டிருந்தார்.
கிரிக் இன்போ தரவுகளின் படி 2023-ல் அவரது ஸ்ட்ரைக் ரேட் 182 ஆகவும், 2024-ல் 221 ஆகவும் இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு, அவரது ஸ்ட்ரைக் ரேட் 135 ஆக குறைந்தது.
இந்நிலையில், தற்போதைய சீசனில் சிஎஸ்கே அணிக்கு நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே கிடைத்துள்ளது. புள்ளிப்பட்டியலில் அணி கடைசிக்கு முன் இடத்தில் உள்ளது.