பெங்களூரு: ஐபிஎல் தொடரில் பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நேற்று பிற்பகலில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணியிலும் மாற்றங்கள் செய்யப்படவில்லை.
முதலில் பேட் செய்த ஆர்சிபி 8 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான பில் சால்ட் 38 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான விராட் கோலி 13 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் லுங்கி நிகிடி பந்தை டீப் கவர் திசையில் தூக்கி அடித்த போது பதும் நிஷங்காவிடம் கேட்ச் ஆனது.
இதைத் தொடர்ந்து தேவ்தத் படிக்கல் 18, கேப்டன் ரஜத் பட்டிதார் 8, டிம் டேவிட் 26, ரோமாரியோ ஷெப்பர்டு 1 ரன்னில் நடையை கட்டினர். இறுதிக்கட்ட ஓவர்களில் ஜிதேஷ் சர்மா 20 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன், 14 ரன்களும், கிருணல் பாண்டியா 10 பந்துகளில், ஒரு சிக்ஸருடன் 12 ரன்களும் சேர்த்தனர். ஆர்சிபி அணியால் கடைசி 5 ஓவர்களில் வெறும் 29 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இந்த காலக்கட்டத்தில் அந்த அணி 4 விக்கெட்களை பறிகொடுத்திருந்தது.
டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ், அக்சர் படேல், லுங்கி நிகிடி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். முகேஷ் குமார் ஒரு விக்கெட் கைப்பற்றினார். 176 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி ஒரு கட்டத்தில் 15 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரரான கே.எல்.ராகுல் 34 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் விளாசிய நிலையில் கிருணல் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்.
பதும் நிஷங்கா 1, கருண் நாயர் 5, சமீர் ரிஸ்வி 2 ரன்களில் நடையை கட்டினர். அக்சர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் களத்தில் இருந்த நிலையில் அந்த அணியின் வெற்றிக்கு கடைசி 5 ஓவர்களில் 46 ரன்கள் தேவையாக இருந்தன. புவனேஷ்வர் குமார் வீசிய 16-வது ஓவரில் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இந்த ஓவரின் 5-வது பந்தில் அக்சர் படேல் தசைபிடிப்பு காரணமாக ரிட்டர்யடு ஹர்ட் முறையில் வெளியேறினார். அக்சர் படேல் 19 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து டேவிட் மில்லர் களமிறங்கினார். ஜோஷ் ஹேசில்விட் வீசிய அடுத்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன. இதனால் டெல்லி அணிக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டன.
புவனேஷ்வர் குமார் வீசிய 18-வது ஓவரில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டார். இந்த ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட்டன. ரஷிக் சலாம் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தை டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பவுண்டரிக்கு விரட்டினார்.
இந்த ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டன. ரோமாரியோ ஷெப்பர்டு வீசிய கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவையாக இருந்தன.
முதல் பந்தில் டேவிட் மில்லர் ஒரு ரன்னும் அடுத்த பந்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு ரன்னும் சேர்த்தனர். தொடர்ந்து அடுத்த 2 பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்கவிட்ட டேவிட் மில்லர் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்ட டெல்லி அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 47 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 60 ரன்களும், டேவிட் மில்லர் 10 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 22 ரன்களும் விளாசினர். 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 4-வது இடத்துக்கு முன்னேறியது.
ஆர்சிபி அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் தொடர்கிறது.
‘ஆர்சிபி சதம்’: நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி நேற்று தனது சொந்த மைதானமான பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் டெல்லி அணியுடன் மோதியது. பெங்களூரு மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு இது 100-வது ஆட்டமாக அமைந்தது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் சொந்த மைதானத்தில் 100 போட்டிகளை விளையாடிய முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது.
பச்சை சீருடை: சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மற்றும் புவி வெப்பமடைதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆர்சிபி அணி கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரின் ஒரு ஆட்டத்தில் மட்டும் பச்சை நிற சீருடையை அணிந்து விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த சீருடை 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட, கார்பன் சமநிலை கொண்ட துணியால் உருவாக்கப்பட்டதாகும். நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி அணி பச்சை நிற சீருடையை அணிந்து விளையாடியது. அந்த அணி பச்சை சீருடையை அணிவது இது 16-வது முறையாகும்.
டிம் டேவிட் ‘1000’: ஆர்சிபி அணியின் நட்சத்திரமான டிம் டேவிட் நேற்று டெல்லி அணிக்கு எதிராக 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர், 7 ரன்களை எடுத்திருந்த போது ஐபிஎல் தொடரில் ஆயிரம் ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த மைல்கல் சாதனையை அவர், 560 பந்துகளில் எட்டியுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் ஆயிரம் ரன்களை எட்டிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த வகை சாதனையில் ஆந்த்ரே ரஸ்ஸல் 545 பந்துகளில் ஆயிரம் ரன்களை எட்டி முதலிடத்தில் உள்ளார்.