சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடி தொடக்கம் கொடுத்தார்.
பவர்பிளேவில் சிஎஸ்கே அணி 61 ரன்கள் குவித்தது. நிதானமாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 18 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் அக்சர் படேல் பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் தூக்கி அடித்த போது பதும் நிசங்காவிடம் கேட்ச் ஆனது.
இதையடுத்து களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே மட்டையை சுழற்றினார். 10 ஓவர்களின் முடிவில் சிஎஸ்கே 88 ரன்கள் சேர்த்தது. நடராஜன் வீசிய 11-வது ஓவரின் முதல் பந்தை ஆயுஷ் மாத்ரே பவுண்டரிக்கு விரட்ட ஃபுல்டாசாக வீசிய 3-வது பந்தை சஞ்சு சாம்சன் டீப் மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் விளாசினார். இந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் சேர்க்கப்பட்டன.
நடராஜன் வீசிய 15-வது ஓவரில் ஆயுஷ் மாத்ரே சிக்ஸர் ஒன்றை விளாச, சஞ்சு சாம்சன் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரி விரட்டினார். இந்த ஓவரில் 19 ரன்கள் விளாசப்பட்டன. சிறப்பாக விளையாடி வந்த ஆயுஷ் மாத்ரே 36 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார். அப்போது சிஎஸ்கே 17 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்திருந்தது. 2-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சனுடன் இணைந்து ஆயுஷ் மாத்ரே 67 பந்துகளில், 113 ரன்கள் சேர்த்திருந்தார். இதையடுத்து ஷிவம் துபே களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 52 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இது அவரது 4-வது சதமாக அமைந்தது.
லுங்கி நிகிடி வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தை ஷிவம் துபே பவுண்டரிக்கு விரட்ட கடைசி பந்தை சஞ்சு சாம்சன் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். முகேஷ் குமார் வீசிய கடைசி ஓவரில் ஷிவம் துபே தலா ஒரு சிக்ஸர், பவுண்டரி விரட்டி அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 56 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 115 ரன்களும், ஷிவம் துபே 10 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
213 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணிக்கு பதும் நிஷங்கா, கே.எல்.ராகுல் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. கே.எல்.ராகுல் 10 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் கலீல் அகமது வீசிய பந்தை விளாச முயன்ற போது மிட்விக்கெட் திசையில் நின்ற ஜேமி ஓவர்டனிடம் கேட்ச் ஆனது. முதல் விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல், பதும் நிஷங்கா ஜோடி 5 ஓவர்களில் 61 ரன்கள் சேர்த்தது.
மட்டையை சுழற்றிய பதும் நிஷங்கா 24 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் அன்ஷுல் கம்போஜ் பந்தில் மிட் ஆன் திசையில் டெவால்ட் பிரேவிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் அக்சர் படேல் ஒரு ரன் எடுத்த நிலையில் குர்ஜப்னீத் சிங்கின் பந்துவீச்சில் சர்ஃபராஸ் கானின் அற்புதமான கேட்ச் காரணமாக நடையை கட்டினார். கடந்த சில ஆட்டங்களில் அதிரடியாக விளையாடிய சமீர் ரிஸ்வி 9 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஜேமி ஓவர்டன் பந்தை டீப் ஸ்கொயர் லெக் திசையில் விளாசிய போது டெவால்ட் பிரேவிஸிடம் கேட்ச் ஆனது.
இதன் பின்னர் டேவிட் மில்லர் 14 பந்துகளில், 17 ரன்கள் எடுத்த நிலையில் ஜேமி ஓவர்டன் பந்தில் போல்டானார். இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் களமிறங்கிய அதிரடி வீரரான அஷுதோஷ் சர்மா 10 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் நூர் அகமது பந்தில் டீப் பாயிண்ட் திசையில் அன்ஷுல் கம்போஜிடம் பிடிகொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஆகிப் நபி 4ரன்களில் ஜேமி ஓவர்டன் பந்தில் ஆட்டமிழந்தார்.
16 ஓவர்களில் டெல்லி அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்தீப் யாதவ் ஆகியோர் களத்தில் இருந்த நிலையில் கடைசி 4 ஓவர்களில் டெல்லி அணியின் வெற்றிக்கு 57 ரன்கள் தேவையாக இருந்தன.
சீராக ரன்கள் சேர்த்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 30 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். இது அவரது 4-வது அரைசதமாக அமைந்தது. அன்ஷுல் கம்போஜ் வீசிய 18-வது ஓவரில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 பவுண்டரிகள் அடித்தார். கடைசி 2 ஓவர்களில் டெல்லி அணியின் வெற்றிக்கு 32 ரன்கள் தேவையாக இருந்தன. இந்த ஓவரின் 3-வது பந்தை
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மிட் ஆஃப் திசையில் அடித்த போது நூர் அகமதுவிடம் கேட்ச் ஆனது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து லுங்கி நிகிடி களமிறங்கினார். எஞ்சிய 3 பந்துகளையும் சிறப்பாக வீசிய ஜேமி ஓவர்டன் வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அன்ஷுல் கம்போஜ் வீசிய கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 28 ரன்கள் தேவையாக இருந்தன. முதல் பந்தில் குல்தீப் யாதவ் (4) ஆட்டமிழந்தார். இதையடுத்து நடராஜன் களமிறங்கினார். கடைசி பந்தில் லுங்கி நிகிடி (3) சிலிப் திசையில் குர்ஜப்னீத் சிங்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் சிஎஸ்கே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிஎஸ்கே தரப்பில் ஜேமி ஓவர்டன் 4 ஓவர்களை வீசி 18 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்களை கைப்பற்றினார். கலீல் அகமது, குர்ஜப்னீத் சிங், நூர் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
சிஎஸ்கேவுக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே ஒரு வெற்றி, 3 தோல்விகளுடன் 2 புள்ளிகளை பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
>முதல் முறையாக.. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் தொடக்க ஜோடியான சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 38 பந்துகளில், 62 ரன்கள் சேர்த்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தற்போதுதான் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்துள்ளது. முதல் 3 ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணியின் தொடக்க ஜோடி முறையே 14, 14 மற்றும் 9 ரன்களே சேர்த்து இருந்தது.
>52 ரன்னில் தப்பித்த சாம்சன்: சஞ்சு சாம்சன் 52 ரன்கள் எடுத்திருந்த போது அக்சர் படேல் வீசிய 10-வது ஓவரின் 3-வது பந்தை லாங் ஆஃப் திசையில் அடித்த போது பதும் நிஷங்கா கேட்ச் செய்யத் தவறினார். இந்தை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சாம்சன் 56 பந்துகளில் 115 ரன்கள் விளாசி அசத்தினார்.
>சதம் அடித்த 2-வது சிஎஸ்கே வீரர்: ஐபிஎல் தொடரில் நேற்று சேப்பாக்கத்தில் டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் சஞ்சு சாம்சன் 115 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் டெல்லி அணிக்கு எதிராக சதம் அடித்த 2-வது சிஎஸ்கே வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றார். இதற்கு முன்னர் 2012-ம் ஆண்டு இதே மைதானத்தில் முரளி விஜய் 113 ரன்கள் எடுத்திருந்தார்.
>6-வது வீரர்: ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் ஆயுஷ் மாத்ரே 59 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார். ஐபிஎல் வரலாற்றில் இதுபோன்று ரிட்டயர்டு அவுட் முறையில் வீரர் ஒருவர் ஆட்டமிழந்து வெளியேறுவது இது 6-வது முறையாகும். இதற்கு முன்னர் 2022-ல் அஸ்வின் (28), 2023-ல் அதர்வா டைடு (55), சாய் சுதர்சன் (43), 2025-ல் திலக் வர்மா (25), டேவன் கான்வே (69) ஆகியோர் ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறிருந்தனர்.
>63-வது பந்தில் முதல் சிக்ஸ்: டெல்லி அணிக்கு எதிராக நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 62 பந்துகளுக்கு பிறகு முதல் சிக்ஸரை அடித்தது.
>2026-ல் முதல் சதம்: ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் சஞ்சு சாம்சன் சதம் விளாசினார். நடப்பு ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும். 2026-ம் ஆண்டு தொடரில் 18-வது ஆட்டத்தில் முதல் சதம் அடிக்கப்பட்டுள்ளது.
>‘படையப்பா’ ரஜினி பாணியில் சல்யூட்: சதம் அடித்த மகிழ்ச்சியை சஞ்சு சாம்சன், படையப்பா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டைலாக அடிக்கும் சல்யூட் போன்று சல்யூட் அடித்து காண்பித்தார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
>3 முறை தப்பித்த ஆயுஷ் மாத்ரே: ஆயுஷ் மாத்ரே 9 ரன்களில் இருந்த போது ரன் அவுட் ஆவதில் இருந்து தப்பித்தார். இதன் பின்னர் அவர், 23 ரன்னில் கொடுத்த கேட்ச்சை குல்தீப் யாதவும், 54 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை டேவிட் மில்லரும் தவறவிட்டனர்.
>32 ஆயிரம் ரசிகர்கள்: நேற்று போட்டியை காண்பதற்காக மைதானத்தில் சுமார் 32,144 ரசிகர்கள் குவிந்திருந்தனர்.