சென்னை: காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் இலங்கையில் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. நேற்று வரை நடைபெற்ற இந்தத் தொடரில் இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மாலத்தீவுகள், பாகிஸ்தான், வங்கதேசம், கென்யா, மலேசியா, சிங்கப்பூர், ஸ்காட்லாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 96 வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இந்திய கிராண்ட்மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இரட்டைத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த இனியன் 7 சுற்றுகள் கொண்ட இரு பிரிவிலும் தலா 6.5 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்தார். ரேபிட் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஸ்ரீஹரி வெள்ளிப் பதக்கமும், மித்ராபா வெண்கலப் பதக்மும் பெற்றனர்.
பிளிட்ஸ் பிரிவில் ரோஹித் கிருஷ்ணா வெள்ளிப் பதக்கமும், ஸ்ரீஹரி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். கிளாசிக்கல் பிரிவில் மித்ராபா சாம்பியன் பட்டம் வெற்றார். இலங்கையின் ரனிந்து லியனகே வெள்ளிப் பதக்கமும், இந்தியாவின் ஸ்ரீஹரி வெண்கலப் பதக்கமும் பெற்றனர். 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பிரிவில் தமிழகத்தின் தமிழ் அமுதன் தங்கப் பதக்கம் வென்றார். 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் பிரிவில் தமிழகத்தின் மேஹா அரின் தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
18 வயதுக்கு உட்பட்ட ஓபன் பிரிவில் தமிழகத்தின் நன்தீஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார். 20 வயதுக்கு உட்பட்டோர் ஓபன் பிரிவில் தமிழகத்தின் மரியம் பாத்திமா வெள்ளிப் பதக்கமும், ஆடவர் பிரிவில் கிரிதன் பொக்கரப்பு வெண்கலப் பதக்கமும் வென்றனர். இவர்கள் 5 பேரும் ஹட்சன் செஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.