விளையாட்டு

ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்: இந்தியா - ஜப்பான் இன்று மோதல்

செய்திப்பிரிவு

நகோயா: ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனான ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி கால் இறுதி சுற்றில் இன்று ஜப்பானுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் காலை 10.30 மணிக்கு நகோயா மாகாணத்தில் நடைபெறுகிறது.

கடந்த வாரம் இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பை தொடரை 8-வது முறையாக வென்ற நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் களமிறங்குகிறது. ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த ஷபாலி வர்மாவிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டைவீச்சு வெளிப்படக்கூடும். அதேவேளையில் ஸ்மிருதி மந்தனா பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும். நடுவரிசையில் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ் பலம் சேர்க்கக்கூடும்.

சுழற்பந்து வீச்சில் தீப்தி சர்மா, ஸ்ரீ சரணி வலுசேர்த்து வருகின்றனர். வேகப்பந்து வீச்சில் நந்தினி சர்மா, ரேணுகா தாக்குர், கிரந்தி கவுடு நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.

சொந்த மண்ணில் விளையாடும் ஜப்பான் மகளிர் அணி, பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ள முயற்சிக்கும்.

SCROLL FOR NEXT