நகோயா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான உள்கட்டமைப்பு மற்றும் தங்குமிட வசதிகள் குறித்து இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் கடும் கவலையும் அதிருப்தியும் தெரிவித்துள்ளன.
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் வரும் செப்டம்பர் 19 முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றுள்ளது. இதில் மகளிருக்கான தொடர் செப்டம்பர் 17 முதல் 22 வரையிலும், ஆடவருக்கான தொடர் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3 வரையிலும் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் கிரிக்கெட் அணிகளுக்கான தங்குமிடம் மற்றும் கிரிக்கெட் மைதான வசதிகள் திருப்திகரமாக இல்லை என இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
போட்டிகள் நடைபெறவுள்ள கொரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானம், பேஸ்பால் மைதானத்தில் இருந்து தற்காலிகமாகக் கிரிக்கெட் மைதானமாக மாற்றப்பட்டு வருகிறது. இங்கு வீரர்களுக்கான உடை மாற்றும் அறைகள் கூடாரங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கழிப்பறைகள் சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், புதிதாக அமைக்கப்பட்ட ஆடுகளங்கள் போதுமான அளவு சோதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
வீரர்களுக்கான தங்குமிட வசதியும் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. வீரர்கள் மைதானத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள நகோயா நகரின் விடுதிகளில் தங்க வைக்கப்பட உள்ளனர். அந்த அறைகள் மிகவும் சிறியதாக இருப்பதால், இருவர் பகிர்ந்து தங்கும்போது கிரிக்கெட் உபகரணங்கள் அடங்கிய பைகள் மற்றும் பயண பைகளை வைக்கக் கூட இட நெருக்கடி ஏற்படும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வசதிகளை நேரில் ஆய்வு செய்ய ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பிரதிநிதிகளை அனுப்ப உள்ளது. இதனிடையே, வசதிகள் மேம்படுத்தப்படாவிட்டால் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இரண்டாம் தர அணியை அனுப்புவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஜப்பானில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து பிசிசிஐ மற்றும் ஏசிசி திருப்தி அடையவில்லை. நிலைமையை நேரில் ஆய்வு செய்ய பிசிசிஐ சார்பில் பார்வையாளர் ஒருவர் அனுப்பப்படுவார். உடை மாற்றும் அறைகள் கூடாரங்களில் அமைக்கப்பட்டுள்ளதையும், கழிப்பறைகள் 500 மீட்டர் தொலைவில் உள்ளதையும் ஜப்பான் ஒலிம்பிக் அதிகாரிகளிடம் ஏசிசி கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம்” என்றார்.
அதேவேளையில், போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்குத் தேவையான தங்குமிடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கமான விளையாட்டு கிராமத்துக்கு பதிலாக விடுதிகள், தற்காலிக அமைப்புகள் மற்றும் ஆடம்பர சொகுசுக் கப்பலில் வீரர்கள் தங்க வைக்கப்படுவார்கள் என்று அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவுக்கு முன்பாகவே கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.