நகோயா: 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் உள்ள மைசுஹோ பார்க் தடகள மைதானத்தில் நேற்று நடைபெற்ற வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.
வரும் அக்டோபர் 4 வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 விளையாட்டு வீரர்களும், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் அகதிகள் அணியினரும் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் 43 விளையாட்டுப் பிரிவுகளில் 469 தங்கப் பதக்கங்களுக்காகப் போட்டியிடுகின்றனர்.
பேரரசி மசாகோ, இளவரசர் அகிஷினோ, இளவரசி கிகோ, ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் ஷேக் ஜோவான் பின் ஹமத் அல் தானி மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் கிரிஸ்டி கோவென்ட்ரி ஆகியோர் முன்னிலையில் விளையாட்டு போட்டிகளை ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். ஜப்பானிய தேசிய கீதம் இசைக்கப்பட்டு, அந்நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன் 2 மணி நேர விழா தொடங்கியது.
தொடர்ந்து, 45 நாடுகள் மற்றும் அகதிகள் அணியைச் சேர்ந்த குழுவினர் கலந்துகொண்ட வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் அணி அணிவகுப்பில் முதலாவதாக நுழைந்தது, அதே நேரத்தில் ஆசிய விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா, 800-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களைக் கொண்ட குழுவுடன் அணி வகுப்பில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாகர் மற்றும் ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற கபடி வீரர் பவன் ஷெராவத் ஆகியோர் அணிவகுப்பின் போது 150 பேர் கொண்ட இந்தியக் குழுவுக்குத் தலைமை தாங்கி, பாரம்பரியமான அடர் நீல நிற உடையில் மூவர்ணக் கொடியைப் பெருமையுடன் ஏந்திச் சென்றனர்.
கடைசி நாடாக போட்டியை நடத்தும் ஜப்பான் அணி வலம் வந்தது. இம்முறை இந்தியாவில் இருந்து 501 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் 36 விளையாட்டுகளில் 256 பிரிவுகளில் பங்கேற்கின்றனர். 2023-ம் ஆண்டு ஹாங்சோ ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 28 தங்கம் உட்பட 106 பதக்கங்களை வென்று சாதனை படைத்து 4-வது இடத்தை பிடித்திருந்தது. இம்முறை இந்த பதக்க எண்ணிக்கையை உயர்த்தும் முனைப்பில் இந்திய அணி செயல்படுவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.
தொடக்க விழாவுக்கு முன்பாகவே சில போட்டிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. நேற்று முன்தினம் மகளிர் கிரிக்கெட்டின் கால் இறுதி சுற்றில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெக்பால் விளையாட்டில் இந்தியா பதக்கத்தை வெல்லும் வாய்ப்பில் உள்ளது. மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் குவின்சி
டிசோசா நேற்று நடைபெற்ற அரை இறுதி சுற்றில் தோல்வி அடைந்தார். எனினும் இன்று நடைபெறும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் குவின்சி டிசோசா களமிறங்கவுள்ளார்.
தொழில்நுட்பத்தையும், கலாச்சாரத்தையும்
வெளிப்படுத்திய கண்கவர் கலை நிகழ்ச்சிகள் ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில், ஜப்பான் தனது தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை பலத்தையும், தனது ஆழமான கலாச்சார வேர்களையும் வெளிப்படுத்தியது. ‘இசைவான இதயத் துடிப்பு’ என்ற கருப்பொருளுடன் ஆசிய விளையாட்டு வீரர்கள் வரவேற்கப்பட்டனர். ‘ஒரே ஆசியா’ என்ற கருப்பொருளைக் காட்சி ரீதியாக வெளிப்படுத்தும் வகையில் இதய வடிவில் தொடக்க விழாவின் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இது கண்டம் முழுவதிலுமிருந்து வந்துள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்களை ‘இதயத்துடன் இதயம்’ இணைப்பதாக அடையாளப்படுத்தப்பட்டது.
30,000 பார்வையாளர்கள் அமரும் வகையில் அமைந்திருந்த மிசுஹோ பார்க் தடகள மைதானத்தில் நடைபெற்ற இந்த கண்கவர் நிகழ்ச்சியானது உள்ளூர் தொழிற்துறை தொழிற்நுட்பத்தையும் பாரம்பரிய கலையையும் இணைத்தது. ஐச்சி மாகாணத்தை தலைமையிடத்தைக் கொண்டுள்ள டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் தனது புதுமை படைப்புகளை தொடக்க விழாவில் காட்சிப்படுத்தியது. ‘விண்வெளியின் விழிப்புணர்வு மற்றும் எதிரொலிக்கும் இதயத் துடிப்பு’ என்ற வரவேற்பு நிகழ்ச்சியுடன் தொடக்க விழா தொடங்கியது. தொடர்ந்து ஜப்பானின் பிரபல வயலின் கலைஞரும், இசையமைப்பாளருமான தாரோ ஹகாசேவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதய வடிவிலான சிறகுகளுடன் கூடிய தேவதை ட்ரோன்கள் காற்றில் மிதந்து வந்து தொடக்க விழாவின் வரவேற்பு நடனத்துக்காக அரங்கத்தை புதிய உலகுக்கு அழைத்துச் சென்றது. சுமார் 240 நடனக் கலைஞர்கள் பல்வேறு வடிவங்களில் ஒன்றிணைந்து, வாழ்க்கையின் தொடர்பையும் துடிப்பையும் வெளிப்படுத்தினர். இறுதியாக, நடனக் கலைஞர்கள் ‘வெல்கம்’ (WELCOME) என்ற சொல்லை உருவமைத்து விருந்தோம்பலை வெளிப்படுத்தினர்.நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியானது ஐச்சி-நகோயா கலாச்சார மற்றும் பாரம்பரியத்தை ‘இதயத் துடிப்பு மற்றும் பாரம்பரியம்’ என்ற கருப்பொருளுடன் நகோயா கோட்டையை மையமாகக் கொண்டிருந்தது. கண்கவர் லேசர்கள் நிகழ்த்தி ஐச்சி-நகோயாவின் உற்பத்தி சிறப்பை வெளிப்படுத்தியது. ‘எதிர்காலத்துடன் இணையும் நல்லிணக்கம்’ என்ற தலைப்பில், உற்பத்தி வரலாற்றை பிரதிபலிக்கும் வகையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் போட்டியின் இலட்சினையான ஹோனோஹோன் நடனத்துடன் விழா நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து மேடையில் போட்டிக்கான ஜோதி ஏற்றப்பட்டது.
ஆசிய விளையாட்டில் இந்திய வீரர்கள் இன்று
பாட்மிண்டன்: காலை 11:30: மகளிர் அணிகள் பிரிவில் இந்தியா - கஜஸ்தான் மோதல்.
கிரிக்கெட்: காலை 10:30: மகளிர் கிரிக்கெட், அரை இறுதியில் இந்தியா - வங்கதேசம் மோதல்.
ஹாக்கி: காலை 7:30: மகளிர் ஹாக்கி லீக் சுற்றில் இந்தியா - உஸ்பெகிஸ்தான் மோதல்.
காலை 11:30: ஆடவர் ஹாக்கி லீக் சுற்றில் இந்தியா - இந்தோனேஷியா மோதல்.
கலப்பு தற்காப்பு கலைகள்: காலை 7:10: மகளிருக்கான பாரம்பரிய 60 கிலோ எடைப் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் சுச்சிகா தரியல் - மங்கோலியாவின் அல்தான்சிமெக் பைகல்மா மோதல்.
பிற்பகல் 2:00: ஆடவருக்கான பாரம்பரிய 77 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் வருண் சன்யால் மோதல்.
துப்பாக்கிச் சுடுதல்: காலை 6:15: மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிபர் பிரிவில் தகுதி சுற்று மற்றும் அணிகள் பிரிவில் இறுதிப் போட்டியில் இளவேனில் வாளறிவன், சோனம் மஸ்கர், விதர்சா வினோத் ஆகியோர் பங்கேற்பு.
காலை 11:00: மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. தகுதி சுற்றின் முடிவை பொறுத்து இதில் இளவேனில் வாளறிவன், சோனம் மஸ்கர், விதர்சா வினோத் பங்கேற்கக்கூடும்.
நீச்சல்: காலை 7:22: ஆடவருக்கான 100 மீட்டர் ப்ரீஸ்டைல் தகுதி சுற்றில் இந்தியாவின் ஆகாஷ் மணி பங்கேற்பு.
காலை 7:37: ஆடவருக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் தகுதி சுற்றில் இந்தியாவின் உத்கர்ஷ் பாட்டீல், ரிஷப் தாஸ் ஆகியோர் பங்கேற்பு.
டேபிள் டென்னிஸ்: காலை 6:30: மகளிர் அணிகள் பிரிவு லீக் சுற்றில் இந்தியா - இந்தோனேஷியா மோதல்.
காலை 9:00: ஆடவருக்கான அணிகள் பிரிவில் இந்தியா - இந்தோனேஷியா மோதல்.
பகல் 12:30: மகளிருக்கான அணிகள் பிரிவில் இந்தியா - சிங்கப்பூர் மோதல்.
பிற்பகல் 3:00: ஆடவருக்கான அணிகள் பிரிவில் இந்தியா - ஈரான் மோதல்.
டெக்பால்: காலை 6:30: மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் குவின்சி டிசோசா, ஜப்பானின் யுயினா சகாமோட்டோவுடன் மோதல்.
காலை 7: கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் குவின்சி டிசோசா, முகமது அனாஸ் பெக் ஜோடி, வியட்நாமின் ஹோவாங் மின் டான் நுயென், கியா நியா ட்ரின் ஜோடியுடன் மோதுகிறது.
வுஷு: காலை 5:30: ஆடவருக்கான சாங்குவான் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சூரஜ் சிங் மயங்லாம்பம் பங்கேற்பு.
பிற்பகல் 3:10: மகளிருக்கான 52 கிலோ எடைப் பிரிவு சன்டாவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அபர்னா, ஈரானின் சோகன்ட் சின்காய்செட்டனுடன் மோதல்.
மாலை 4:50: ஆடவருக்கான 75 கிலோ சன்டா கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் விக்ராந்த் பாலியன், ஈரானின் சோஹெய்ல் மூசவியுடன் மோதல்.