இந்தியா-ஏ அணி வீரர்கள்
தம்புல்லா: இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா-ஏ அணியை டக்வொர்த் லூயிஸ் முறையில் வீழ்த்தியது ஆப்கன்-ஏ அணி.
இந்தியா-ஏ, இலங்கை-ஏ, ஆப்கானிஸ்தான்-ஏ உள்ளிட்ட மூன்று அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தத் தொடரின் ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் உள்ள தம்புல்லாவில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் கேப்டனாக திலக் வர்மா செயல்படுகிறார். இலங்கை-ஏ அணி உடனான முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-ஏ மற்றும் இந்தியா-ஏ அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட் செய்த இந்தியா-ஏ அணி 49 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 349 ரன்கள் சேர்த்தது. மழை காரணமாக 49 ஓவர்கள் ஆட்டமாக இது மாற்றப்பட்டது.
இந்திய அணி சார்பில் பிரப்சிம்ரன் சிங் 84, வைபவ் சூர்யவன்ஷி 44, ருதுருராஜ் கெய்க்வாட் 66, திலக் வர்மா 66, சூர்யான்ஷ் ஷெட்கே 40 ரன்கள் எடுத்தனர். 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆப்கானிஸ்தான்-ஏ அணி விரட்டியது.
அந்த அணி 25.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. கேப்டன் இம்ரான் மீர் 75, ஹசன் 34, பஹிர் ஷா 51, காலித் 2 ரன்கள் எடுத்தனர். அப்போது மழை குறுக்கிட்டது. இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொடரின் அடுத்த ஆட்டம் சனிக்கிழமை அன்று இலங்கை மற்றும் ஆப்கன் இடையே நடைபெறுகிறது.