விளையாட்டு

IPL 2023: MI vs GT | ரஷீத்தின் விக்கெட் வேட்டை; சூர்யகுமாரின் முதல் செஞ்சுரி - குஜராத்துக்கு 219 ரன்கள் இலக்கு 

செய்திப்பிரிவு

மும்பை: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 218 ரன்களை குவித்தது.

நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா முந்தைய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் 2 சிக்ஸர்களை விளாசி அடித்து ஆடினார். இந்த ஆட்டத்தில் அரைசதமாவது அடிப்பார் என காத்திருந்த ரசிகர்களுக்கு அதில் பாதியான 29 ரன்களைச் சேர்த்துவிட்டுச் சென்றார். அவர் அவுட்டான அதே ஓவரில் இஷான் கிஷனும் 31 ரன்களில் விக்கெட்டாக ரஷித்கானுக்கு 7ஆவது ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகள் தேறின. அடுத்து வந்த நேஹல் வதேரா போல்டானார்.

சூர்யகுமார் யாதவ் விஷ்ணு வினோத் பார்ட்னர்ஷிப் அமைக்க 15 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 151 ரன்களைச் சேர்த்திருந்தது. விஷ்ணு வினோத் 30 ரன்கள், டிம் டேவிட் 5 ரன்களிலும் கிளம்ப சூர்யகுமார் யாதவின் அதிரடியால் குஜராத் திக்குமுக்காடி போனது. 6 சிக்சர்கள் விளாசி தனது முதல் சதத்தை பதிவு செய்தார் சூர்யகுமார் யாதவ்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த மும்பை 218 ரன்களைச் சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 103 ரன்களுடன் கடைசிவரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். குஜராத் அணி தரப்பில் ரஷீத்கான் 4 விக்கெட்டுகளையும், மோஹித் ஷர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

2011-ம் ஆண்டுக்குப்பிறகு வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT