விராட் கோலி | கோப்புப்படம் 
விளையாட்டு

சிஎஸ்கே-வுக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறிய கோலி: 10% அபராதம் விதிப்பு

செய்திப்பிரிவு

பெங்களூரு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆர்சிபி வீரர் கோலிக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை தழுவிய நிலையில் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோலி களத்தில் ஆக்ரோஷத்துடன் இயங்குபவர். அண்மைக் காலமாக மிகவும் அமைதியாக இருந்து வருகிறார். இந்தச் சூழலில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணிக்கு எதிராக ஃபீல்ட் செய்த போது 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார் சென்னை வீரர் ஷிவம் துபே. அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை முகமது சிராஜ் பிடித்திருந்தார். அதை கோலி மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாடி தீர்த்தார். இதுதான் அபராதம் விதிக்கப்பட காரணம் எனத் தெரிகிறது.

“பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என ஐபிஎல் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

ஐபிஎல் நடத்தை விதிகள் 2.2-ன் (லெவல் 1) கீழ் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தப் போட்டியில் 227 ரன்கள் என்ற இலக்கை விரட்டி ஆட்டத்தை இழந்தது பெங்களூரு. கோலி, 4 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

SCROLL FOR NEXT