டெல்லி: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 172 ரன்கள் குவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் 16-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை செய்து வருகின்றன. இரு அணிகளும் நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய போட்டிகளில் வெற்றி பெறவில்லை. இன்றைய போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யப்போவது யார் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
டேவிட் வார்னர் உடன் பிரிதிவி ஷா ஓப்பனிங் இறங்கினார். கடந்த மேட்சில் பூஜ்யத்தில் அவுட் ஆன பிரிதிவி இம்முறை 15 ரன்களுக்கு நடையைக் கட்டினார். மனிஷ் பாண்டேவும் கிடைத்த வாய்ப்பில் பெரிதாக சோபிக்கவில்லை. 26 ரன்கள் எடுத்திருந்த அவர், சாவ்லா பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.
யஷ் துல் 2 ரன்கள் ரோவ்மென் பவல் 4 ரன்கள், லலித் யாதவ் 2 ரன்கள் என மிடில் ஆர்டரும் கைகொடுக்க தவறினாலும், வார்னர் தனியாளாக போராடினார். இறுதி ஓவர்களில் அக்சர் படேல் அவருக்கு பக்கபலமாக அமைந்தார்.
வார்னர் நிதானத்தை கடைபிடிக்க, அக்சர் ஆக்ரோஷம் காட்டினார். இதனால், டெல்லி கேபிடல்ஸ் ரன்கள் விரைவாக உயர்ந்தது. 22 பந்துகளில் அரைசதம் கடத்த அக்சர், அடுத்த இரண்டு பந்துகளில் 54 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதற்கடுத்த இரண்டாவது பந்தே 51 ரன்கள் எடுத்திருந்த வார்னரும் விக்கெட்டை பறிகொடுத்தார். குல்தீப் யாதவ் வந்த வேகத்தில் ரன் அவுட் ஆனார். ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் போரல் 1 கேட்ச் ஆக, குறிப்பிட்ட 19வது ஓவரில் மட்டும் 4 விக்கெட்களை இழந்தது டெல்லி அணி.
இறுதியில் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது டெல்லி. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பியூஸ் சாவ்லா மற்றும் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் தலா 3 விக்கெட்டும், ரிலே மெரிடித் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.