பஞ்சாப்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை சேர்த்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் - ஷிகர் தவான் இணை தொடக்கம் கொடுத்தது. பிரப்சிம்ரன் சிங் 2 சிக்ஸர், 2 ஃபோர் என அதிரடி ஆட்டத்தில் இறங்கினாலும் 2-வது ஓவரிலேயே அவுட்டாகி நடையைக் கட்டினார். பனுகா ராஜபக்ஷா, ஷிகர் தவான் பாட்னர்ஷிப் அமைத்து, கொல்கத்தாவின் பந்துகளை பஞ்சாக பறக்கவிட்டனர். இருவரின் அதிரடியால் பஞ்சாப் அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 100 ரன்களைச் சேர்த்தது.
32 பந்துகளில் 50 ரன்களைச் சேர்த்த பனுகா ராஜபக்ஷாவை உமேஷ் யாதவ் விக்கெட்டாக்கினார். அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா 2 சிக்ஸர்களை விளாசி 21 ரன்களை தன் பங்குக்கு சேர்த்துவிட்டு கிளம்பினார். அணிக்கு நம்பிக்கையளிப்பார் என எதிர்பார்த்த தவான் (40ரன்கள்) வருண் சக்ரவர்த்தியால் போல்டாக்கப்பட்டு பெவிலியன் திரும்பினார். தொடக்கத்தில் அதிரடி காட்டிய பஞ்சாப் அணி விக்கெட்டு இழப்பால் தடுமாறி 15 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை சேர்த்தது.
அடுத்து வந்த சிக்கந்தர் ராசா (16) பெரிதாக சோபிக்கவில்லை. சாம் கரன் இறுதி ஓவரில் சிக்ஸர் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களைச் சேர்த்தது. சாம் கரன் 26 ரன்களுடனும், ஷாருக்கான் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணி தரப்பில் டிம் சவுதி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.