விளையாட்டு

இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பால் பார்பிரேஸ் விலகல்

செய்திப்பிரிவு

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பால் பார்பிரேஸ் அப்பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.இங்கிலாந்தைச் சேர்ந்த அவர் தங்கள் நாட்டு கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராகப் பொறுப்பேற்க இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.

பால் பார்பிரேஸ் தனது முடிவை இலங்கை கிரிக்கெட் சங்கத்திடம் நேற்று காலை அதிகாரப்பூர்வமாக தெரிவித்ததாக சங்கத்தின் செயலாளர் நிஷாந்தன் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

முதலில் இலங்கை அணியின் துணைப் பயிற்சியாளராக இருந்த பால் பார்பிரேஸ் கடந்த ஆண்டு இறுதியில்தான் தலைமை பயிற்சியாளர் ஆனார். சமீபத்தில் இருபது ஓவர் உலகக் கோப்பையை இலங்கை அணி வென்றதில் அவரது சிறப்பான பங்களிப்பு இருந்தது.

வங்கதேசத்துக்கு எதிராக கிரிக்கெட் தொடர், ஆசிய கோப்பை கிரிக்கெட் ஆகியவற்றில் இலங்கை அணியை அவர் வழிநடத்தினார். 2015-ம் ஆண்டு வரை இலங்கை கிரிக்கெட் சங்கத்தால் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.-பி.டி.ஐ.

SCROLL FOR NEXT