விராட் கோலி | கோப்புப்படம் 
விளையாட்டு

எப்போதுமே அணிக்காக எனது திறனை 100% வெளிப்படுத்த விரும்புவேன்: கோலி

செய்திப்பிரிவு

கவுகாத்தி: எப்போதும் அணிக்காக தனது 100 சதவீத திறனை வெளிப்படுத்த வேண்டும் என தான் விரும்புவதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய பிறகு அவர் இதனை பகிர்ந்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கவுகாத்தி நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இது முதல் போட்டியாகும். இந்திய அணி முதலில் பேட் செய்து 373 ரன்களை குவித்தது. இதற்கு பிரதான காரணமாக அமைந்தது கோலியின் சதம். மொத்தம் 87 பந்துகளில் 113 ரன்களை அவர் எடுத்திருந்தார். இதில் 12 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். இந்த அற்புதமான இன்னிங்ஸிற்கு பிறகு அவர் தெரிவித்தது:

“இந்த போட்டிக்கு முன்னதாக எனக்கு சின்னதாக ஒரு பிரேக் கிடைத்தது. அது முடிந்த கையோடு இரண்டு பயிற்சி செஷன்களை முடித்துவிட்டு நேரடியாக போட்டியில் விளையாடினேன். சொந்த மண்ணில் தொடங்கும் இந்த சீசனை ஆர்வமுடன் எதிர்நோக்கி இருந்தேன். இந்த ஆட்டத்தில் நான் சிறந்து செயல்பட இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை தொடக்கத்தை கொடுத்தது. மற்றொன்று எனது ஸ்ட்ரைக் ரேட்.

எனக்கு கிடைத்த வாய்ப்புகளை நான் பயன்படுத்திக் கொண்டேன். எனது வயது காரணமாக டயட் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். அதனை எனது எனர்ஜிக்கான எரிசக்தி என்றும் சொல்லலாம். எப்போதுமே அணிக்காக எனது திறனை 100 சதவீதம் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புவேன். அதையே இதில் செய்தேன்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT