ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, சர்வதேச தரவரிசை பட்டிய லில் 2 இடங்கள் முன்னேறி முதன் முறையாக 7-வது இடத்தை பிடித்துள்ளார். அதேவேளையில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நெவால் 10-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
சிந்து, சமீபத்தில் நடைபெற்ற சீன ஓபனில் பட்டம் வென்றிருந்தார். மேலும் ஹாங் காங் ஓபனில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அவர் 2-வது இடத்தை கைப்பற்றினார். இதன் மூலம் சிந்து 68,699 புள்ளிகள் பெற்று தரவரிசை பட்டியலில் 7-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
சிறந்த பார்மில் உள்ள அவர், வரும் 14-ம் தேதி நடைபெறும் துபை சூப்பர் சீரிஸ் பைனல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். உலகின் முன்னணி வீராங்கனைகள் மோதும் இந்த தொடரில் சிந்து பங்கேற்பது இதுவே முதன்முறை.
முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சாய்னா, காயத்தில் இருந்து மீண்டு தற்போது தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இரு தொடர்களில் விரைவிலேயே வெளியேறிய அவர் கடந்த முறை வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் 5 இடங்களை இழந்து 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் மக்காவு ஓபனில் கால் இறுதி வரை சாய்னா முன்னேறியிருந்தார். இதனால் அவர், தரவரிசை பட்டியலில் ஒரு இடம் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆடவர் பிரிவில் காயம் காரணமாக சமீபகால போட்டிகளில் விளையாடாத இந்தியாவின் காந்த் தரவரிசையில் 13-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதேவேளையில் ஹாங்காங் ஓபனில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய சமீர் வர்மா 13 இடங்கள் முன்னேறி 30-வது இடத்தை பிடித்துள்ளார். இரட்டை யர் பிரிவில் அனுஅட்ரி, சுமித் ரெட் ஜோடி ஒரு இடம் பின்தங்கி 23-வது இடத்தில் உள்ளது.