இந்திய அணி வீரர்கள் 
விளையாட்டு

IND vs BAN | உமேஷ், அஸ்வின் அபாரம்: வங்கதேசம் 227 ரன்களுக்கு ஆல் அவுட்

செய்திப்பிரிவு

டாக்கா: இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது. இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 19 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்தச் சூழலில் இன்று டாக்காவில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இருந்தும் அந்த அணி 73.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் எடுத்தது. மொமினுல் ஹக், சிறப்பாக பேட் செய்தார். 157 பந்துகளை எதிர்கொண்ட அவர் 84 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரது விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றி இருந்தார். லிட்டன் தாஸ், ரஹீம் போன்ற வீரர்கள் கொஞ்ச நேரம் களத்தில் விளையாடி இருந்தனர். ஆனாலும் அவர்களால் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆட முடியவில்லை.

இந்திய அணி பவுலர்களில் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். உனத்கட், 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். சிராஜ் மற்றும் அக்சர் படேல் முதல் இன்னிங்ஸில் விக்கெட் வீழ்த்தவில்லை.

தொடர்ந்து இந்திய அணி பேட் செய்தது. முதல் நாள் ஆட்டம் நிறைவு பெற்ற போது 8 ஓவர்கள் பேட் செய்து 19 ரன்கள் எடுத்தது. கேப்டன் ராகுல் மற்றும் சுப்மன் கில் களத்தில் உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இந்த போட்டியில் முதல் நாள் ஆட்டம் இந்திய அணிக்கு சாதகமாக முடிந்ததுள்ளது. இரண்டாம் நாள் ஆட்டமான நாளைய நாளின் தொடக்கத்தில் இந்திய அணி விக்கெட் இழக்கவில்லை என்றால் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பு உள்ளது.

SCROLL FOR NEXT