புதுச்சேரி: இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இந்தத் தோல்வியில் இருந்து எதிர்வரும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் குறித்த சில பாடங்களை இந்திய அணி கற்றிருக்கும். அதில் ஒன்று ஷ்ரேயஸ் ஐயர். இந்திய அணியின் மிடில் ஆர்டர் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் திகழ்கிறார்.
எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்காக கட்டமைக்கப்பட்டு வரும் இந்திய அணியில் தவிர்க்கமுடியாத வீரராக உருவெடுத்துள்ளார். அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு தனக்கு கிடைக்கும் போதெல்லாம் தனது திறன்களை வெளிப்படுத்தி வருகிறார். அதன் வெளிப்பாடுதான் நடப்பு ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி வீரர்களில் அதிக ரன்களை எடுத்துள்ள பேட்ஸ்மேனாக அவர் இருக்க காரணம்.
நடப்பு ஆண்டில் இதுவரையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 14 இன்னிங்ஸ் விளையாடி 721 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 அரை சதம் மற்றும் ஒரு சதமும் அடங்கும். இன்னிங்ஸ் ஒன்றில் அவர் எடுத்துள்ள அதிகபட்ச ரன்கள் 113. பேட்டிங் சராசரி 60.88. 7 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.
கடந்த 2017 முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஷ்ரேயஸ் விளையாடி வருகிறார். அதன் மூலம் மொத்தம் 1534 ரன்களை அவர் எடுத்துள்ளார். இதில் 2 சதம் மற்றும் 14 அரை சதங்கள் அடங்கும். நேற்று வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 82 ரன்களை குவித்திருந்தார்.