இந்தியா - இங்கிலாந்து போட்டி 
விளையாட்டு

T20 WC அரையிறுதி | அரைசதம் விளாசிய கோலி, பாண்டியா: இங்கிலாந்துக்கு 169 ரன்கள் இலக்கு

செய்திப்பிரிவு

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா.

அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்காக கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ராகுல் வெறும் 5 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

பின்னர் வந்த கோலி உடன் 47 ரன்களுக்கு ஒரு குட்டி பார்ட்னர்ஷிப் அமைத்தார் ரோகித் சர்மா. அவர் 28 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன் பின்னர் ஹர்திக் பாண்டியா களத்திற்கு வந்தார். 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா.

16-வது ஓவரின் இரண்டாவது பந்தில் கிறிஸ் ஜார்டன் வீசிய பந்தில் ஆட முடியாமல் அப்படியே நிலைகுலைந்து களத்தில் விழுந்தார் விராட் கோலி. இருந்தும் அடுத்த பந்தில் பவுண்டரி விளாசி அசத்தினார். அதோடு டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டி இருந்தார் கோலி. பாண்டியாவுடன் 61 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அவர் அவுட் ஆகி இருந்தார். 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார் அவர். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடங்கும்.

29 பந்துகளில் அரைசதம் விளாசி இருந்தார் பாண்டியா. ரிஷப் பந்த், 6 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். பாண்டியா, 33 பந்துகளில் 63 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸின் கடைசி பந்தில் அவுட்டானார். 4 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் இதில் அடங்கும்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது இந்தியா. இந்த போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 169 ரன்கள் தேவை. இதில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிறு அன்று பாகிஸ்தான் அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும்.

SCROLL FOR NEXT