பாகிஸ்தான் வீரர்கள் 
விளையாட்டு

T20 WC | நியூஸி.க்கு எதிராக அபார பந்துவீச்சு; பாகிஸ்தான் இறுதிக்கு தகுதி பெற 153 ரன்கள் இலக்கு

செய்திப்பிரிவு

சிட்னி: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேற பாகிஸ்தான் அணிக்கு 153 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணி, நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் அபாரமாக பந்து வீசி இருந்தது. முக்கியமாக சிறப்பான ஃபீல்டிங்கை பாகிஸ்தான் வெளிப்படுத்தியிருந்தது.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களை அந்த அணி எடுத்தது. ஃபின் ஆலன், டெவான் கான்வே மற்றும் கிளென் பிலிப்ஸ் போன்ற பேட்ஸ்மேன்கள் விரைவில் வெளியேறி இருந்தனர்.

கேப்டன் வில்லியம்சன் 42 பந்துகளில் 46 ரன்களை குவித்தார். மறுபக்கம் மிட்செல், 35 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். கடந்த 2021 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் அவர் அரைசதம் விளாசி இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். நவாஸ் ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

இன்னிங்ஸில் திருப்புமுனை ஏற்பட்ட தருணம்: இந்தப் போட்டியில் கான்வே 21 ரன்கள் எடுத்தார். பவர்பிளே ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க முயன்று ஷதாப் கான் அடித்த டைரக்ட் ஹிட்டில் கான்வே ரன் அவுட்டானார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் திருப்புமுனை ஏற்படுத்திய தருணம் என அதனை சொல்லலாம். அதன் பிறகு ஆட்டம் முழுவதுமான பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது பாகிஸ்தான் அந்த இலக்கை விரட்டி வருகிறது.

பவர்பிளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான் அணி. அந்த அணியின் சிறந்த பவர்பிளே ஸ்கோராக இந்த போட்டி அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT