நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அரை இறுதிக்கு முன்னேறும் டாப் நான்கு அணிகள் எவை எதிர்பார்ப்பு மில்லியன் கணக்கில் எகிறி உள்ளது. பெரும்பாலான ரசிகர்களின் ஃபேவரைட் அணிகள்தான் அதில் விளையாட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. இருந்தாலும் கடைசி நேரத்தில் எதிர்பாராத அப்செட் காரணமாக வேறு சில அணிகளுக்கு வாய்ப்பும் கிடைக்கலாம். இத்தகைய சூழலில் வரும் ஞாயிறு அன்று இந்திய அணி, ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. இதில் ஜிம்பாப்வே வென்றால் தொடரில் பெரிய அளவில் தாக்கம் ஏற்படும்.
இந்தச் சூழலில், இந்தப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தினால் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்தவரை மணம் முடிப்பேன் என பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடிகை ஷெகர் ஷின்வாரி ட்வீட் செய்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் ரியாக்ட் செய்துள்ளனர்.
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் விளையாட்டுப் போட்டிகளில் வெல்லும் ஆடவர்கள், அந்த நாட்டில் உள்ள இளவரசிகளை மணம் செய்து கொள்வார்கள். இதை திரைப்படங்களில் கூட பார்த்துள்ளோம். கிட்டத்தட்ட ஷெகரின் இந்த அறிவிப்பும் அப்படித்தான் உள்ளது என்று நெட்டிசன்கள் சொல்கின்றனர்.
முன்னதாக, இந்தியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்தபோது பாகிஸ்தான் ரசிகர்கள், வங்கதேச அணிக்கு முழு ஆதரவு கொடுத்தனர். ஆனால், அந்தப் போட்டியில் இந்தியா வென்றது. இப்போது பாகிஸ்தான் ரசிகர்கள் ஜிம்பாப்வே அணியை ஆதரித்து வருகின்றனர். இதற்கு முன்னர் ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தபோது அந்த அணியை மட்டம் தட்டி தூற்றியவர்கள் இப்போது போற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், பகிரங்கமாக சமூக வலைதளத்தில் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்ட ஷெகரை, பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.