விளையாட்டு

டி20 உலக கோப்பை | முதல் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி நமீபியா அபார வெற்றி 

செய்திப்பிரிவு

மெல்போர்ன்: டி20 உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் நமீபியாவிடம் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது.

8-வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. தகுதிச் சுற்றுப்போட்டியின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை, நமீபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தீர்மானித்தது. அதன்படி களம் கண்ட நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை சேர்த்தது. அதில், பிரைலின்க் 28 பந்துகளில் 44 ரன்களும், ஜே.ஜே.ஸ்மித் அவுட் ஆகாமல் 16 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணி, நமீபிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் தொடக்க வீரர் நிசங்கா 9 ரன்னுக்கும், மெண்டீஸ் 6 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். தனன்யா டிசெல்வா 12 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். குணதிலகா டக்அவுட்டானார். அதிகபட்சமாக கேப்டன் தசுன் ஷனகா 29 ரன்னும், பானுகா ராஜபக்சே 20 ரன்னும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுடன் பெவிலியன் திரும்பினர்.

அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 19 ஓவர் முடிவில் 108 ரன்களை மட்டுமே சேர்ந்து தோல்வியடைந்தது. நமீபியா அணி தரப்பில் டேவிட் வைஸ், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ்,பென் ஷிகோங்கோ,ஜான் ப்ரைலின்க் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT