பெடரரும், நடாலும் உணர்ச்சி ததும்ப கண்ணீர்விடும் புகைப்படமும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
41 வயதான டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் சர்வதேச டென்னிஸ் களத்திலிருந்து விடைபெறுகிறார். அண்மையில் அது குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருந்தார். பிரிட்டனில் நடைபெறும் லேவர் கோப்பை தொடர் தான் தனது கடைசி தொடர் என அவர் அறிவித்திருந்தார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துச் செய்திகளின் மூலம் பிரியாவிடை கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் நடால், ஆண்டி முர்ரே, ஜோகோவிச் மற்றும் ரோஜர் பெடரர் என மாடர்ன் டே டென்னிஸ் விளையாட்டின் மகத்தான நான்கு வீரர்களும் ஐரோப்பா அணிக்காக நடப்பு லேவர் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுகின்றனர். இதில் நடால் மற்றும் பெடரர் இரட்டையர் பிரிவில் கலந்து விளையாடினர்.
போட்டியின் முடிவில் பெடரை வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பெடரரும், நடாலும் அருகருகே அமர்ந்து இருந்தனர். அப்போது பெடரர் கண்ணீர்விட, டென்னிஸ் போட்டியில் அவரது நீண்டகால போட்டியாளராக கருதப்படும் நடாலும் கண்ணீர்விட்டு அழத் தொடங்கிவிடுவார். இதனைக் கண்ட ரசிகர்கள் அனைவரும் போட்டியை கடந்து இருவரிடையே நிலவும் நட்பை வெகுவாகப் பாராட்டினர். இணையத்தில் இந்த வீடியோவும், புகைப்படங்களும் வைரலாக பிரபல விளையாட்டு வீரர்களும் இவர்களது நட்பைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், ”போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் இப்படி உணர்வுபூர்வமாக கண்ணீர் விடுவார்கள் என்று யாராவது நினைத்திருப்பார்களா? இதுதான் விளையாட்டின் அழகு. இதுவே எனக்கு பிடித்த அழகான ஸ்போர்ட்ஸ் படம். உங்களுடைய நண்பர் உங்களுக்காக அழும்போது கடவுள் கொடுத்த திறமையை ஏன் உங்களால் சிறப்பாக செய்ய முடிந்தது என்பதை உங்களால் அறிய முடியும். உங்கள் இருவருக்கும் என் மரியாதை... வேறு எதுவுமில்லை” என்று பதிவிட்டுள்ளார்.