இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் தனக்கு நான்காவது பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடுவது தான் சரியானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார் சூர்யகுமார் யாதவ். அவர் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். அதிரடியாக விளையாடி வான வேடிக்கை காட்டுவதில் வல்லவர் அவர்.
32 வயதான அவர் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 13 ஒருநாள் மற்றும் 28 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் மொத்தம் 1151 ரன்களை எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 6 அரை சதம் மற்றும் 1 சதம் விளாசி உள்ளார். இந்த வடிவ கிரிக்கெட்டில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 173.29. தொடக்க ஆட்டக்காரரில் ஆரம்பித்து ஐந்தாவதாக களம் இறங்குவது வரையில் அவர் பல்வேறு இடங்களில் பேட் செய்துள்ளார்.
இந்த நிலையில் தான் பேட் செய்ய தனக்கு ஏற்ற சிறப்பான இடம் எது என்பதை அவர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் யார் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“எனக்கு எல்லா இடத்திலும் பேட் செய்ய விருப்பம் தான். ஆனால் நான்காவது இடத்தில் விளையாடுவது சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன். அது எனக்கு நல்லதும் கூட. ஏனெனில் 7 முதல் 15 ஓவர்கள் வரையிலான நேரத்தில் நான் ரொம்பவே அனுபவித்து கிரிக்கெட் விளையாடுவேன். அந்த கட்டத்தில் நான் நேர்மறை எண்ணங்களுடன் இருப்பேன். என்னை பொறுத்தவரையில் டி20 கிரிக்கெட்டில் 8 முதல் 14-வது ஓவர் வரையிலான நேரம் ரொம்பவே முக்கியம் என கருதுகிறேன்.
அந்த சமயத்தில் நான் ரிஸ்க் எடுப்பதை தவிர்ப்பேன். கவர் திசைக்கு மேல் பந்தை தட்டிவிட்டு கடினமாக ஓடி ரன் எடுப்பேன். நான்காவது இடத்தில் விளையாடுவது சவாலானதும் கூட” என தெரிவித்துள்ளார்.