ரோகன் கவாஸ்கர் & விராட் கோலி. 
விளையாட்டு

டி20 போட்டிகளில் விராட் கோலி ஓப்பனராக களம் இறங்குவது சிறந்தது: ரோகன் கவாஸ்கர்

செய்திப்பிரிவு

டி20 போட்டிகளில் விராட் கோலி ஓப்பனராக களம் இறங்குவது சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதற்காக வேண்டி கே.எல்.ராகுல் தனது ஓப்பனர் இடத்தை தியாகம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

“விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவது சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என நான் கருதுகிறேன். அவரது சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் போன்றவை அதனை தெளிவாக விவரிக்கிறது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க அவரே விரும்புவதாக சொல்லியதாக எனக்கு நியாபகம் உள்ளது. அது இந்திய அணிக்கும் உதவும்.

அதேபோல மூன்றாவது பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் களம் இறங்க வேண்டும். இது நடக்க வேண்டுமெனில் ராகுல் அதற்கு தனது இடத்தை தியாகம் செய்ய வேண்டி உள்ளது. கோலி யாருக்கு எதிராக சதம் பதிவு செய்தார் என்பது முக்கியமல்ல. அவர் பதிவு செய்துள்ளது சர்வதேச சதம் என்பதை மட்டுமே நாம் கவனிக்க வேண்டும். மீண்டும் அவர் ரன் மெஷினாக ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு சாதகமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

விராட் கோலி மொத்தம் 104 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 96 இன்னிங்ஸ். அதில் தொடக்க ஆட்டக்காரராக 9 இன்னிங்ஸ் விளையாடி உள்ளார். அதன் மூலம் இரண்டு அரை சதம் மற்றும் ஒரு சதம் பதிவு செய்துள்ளார். மொத்தம் 400 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 161.29. சராசரி 57.14.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரில் விளையாட உள்ளது. அது முடிந்த பிறகு டி20 உலகக் கோப்பையில் விளையாட உள்ளது.

SCROLL FOR NEXT