பல்லேகல: இலங்கை வீராங்கனை அனுஷ்கா சஞ்சீவனியை மிக அற்புதமாக ரன் அவுட் செய்து வெளியேற்றினார் இந்திய விக்கெட் கீப்பர் யாஸ்திகா பாட்டியா. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரில் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது இந்திய அணி.
இன்று பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இலங்கை அணி பேட் செய்தபோது 23-வது ஓவரை தீப்தி சர்மா வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை அனுஷ்கா சஞ்சீவனி எதிர்கொண்டார். அவர் எந்த ஷாட் ஆடுவது என்ற குழப்பத்தில் இறுதியில் ஒருவழியாக அந்த பந்தை கிரீஸில் இருந்து முன் நகர்ந்து வந்து தடுத்தார்.
சில நொடிகள் அவர் கிரீஸுக்கு வெளியே இருந்ததை கவனித்த இந்திய விக்கெட் கீப்பர் யாஸ்திகா பாட்டியா பந்தை எடுத்து ஸ்டம்பை நோக்கி வீசி அதனை தகர்த்தார். சில மைக்ரோ நொடிகள் வித்தியாசத்தில் அனுஷ்கா கிரீஸுக்கு உள்ளே வராத காரணத்தால் விக்கெட்டை இழந்தார். இது யாஸ்திகா பாட்டியவுக்கு கிரிக்கெட் குறித்துள்ள புரிதலை வெளிப்படுத்துகிறது என்று தான் சொல்ல வேண்டும்.