விளையாட்டு

IPL 2022 Qualifier 2 | மீண்டும் தகர்ந்தது ஆர்சிபி கனவு - ஜாஸ் பட்லரால் 14 ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் பைனலில் ராஜஸ்தான்

செய்திப்பிரிவு

குஜராத்: நடப்பு ஐபிஎல் சீசனின் குவாலிபையர் - 2 போட்டியில் வென்று ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் இந்த இரண்டாவது குவாலிபையர் போட்டி நடைபெற்றது. இதில் 158 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஓப்பனிங் ஜோடி பவர் பிளே ஓவர்கள் வரை தாக்குப்பிடித்தது. அதிரடியாக துவங்கிய யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் 21 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டாக வெளியேறினார்.

ஆனால் மற்றொரு ஓப்பன் ஜாஸ் பட்லர் வழக்கம் போல இந்தப் போட்டியிலும் வெளுத்து வாங்கினார். அவர் ஒற்றை ஆளாக ரன்களை துரத்த, ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை எளிதாக நெருங்கியது. இந்த தொடரில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார். 60 பந்துகளை சந்தித்த அவர், 59வது பந்தில் இந்த தொடரின் நான்காவது சதத்தை பதிவு செய்தார். 60வது பந்தில் ஒரு சிக்ஸ் அடித்து வெற்றியை தேடித் தந்தார். 18.1வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 வருடங்களுக்கு பிறகு ஐபிஎல் பைனல் போட்டியில் நுழைந்துள்ளது.

3 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான். பட்லர் மட்டும் இதில் 106 ரன்கள் சேர்த்து அசத்தினார். பெங்களூரு தரப்பில் ஹேசில்வுட் இரண்டு விக்கெட்டை சாய்த்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்னிங்ஸ்: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சான், பவுலிங் தேர்வு செய்தார். அதனால் பெங்களூரு அணி முதல் இன்னிங்ஸில் பேட் செய்தது. அந்த அணியின் கேப்டன் டூப்ளசி மற்றும் விராட் கோலி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கோலி 7 ரன்கள் எடுத்து இரண்டாவது ஓவரில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த ரஜத் பட்டிதார், டூப்ளசி உடன் 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். டூப்ளசி 27 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். மேக்ஸ்வெல், 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

நிலைத்து நின்று ஆடிக் கொண்டிருந்த பட்டிதார் 42 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அவுட்டானார். 4 பவுண்டரியும், 3 சிக்ஸர்களும் அவர் விளாசி இருந்தார். கடைசி ஐந்து ஓவர்களில் வெறும் 34 ரன்கள் மட்டுமே எடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது பெங்களூரு. நிச்சயம் இந்த கடைசி 5 ஓவர்கள் பெங்களூருவுக்கு ஆட்டத்தில் பலமான பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாகவே தெரிகிறது. அதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது அந்த அணி. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ராஜஸ்தான் விரட்டி வருகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிறு அன்று இறுதிப் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக விளையாடும். ராஜஸ்தான் அணிக்காக பிரசித் கிருஷ்ணா, மெக்காய் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர். போல்ட், அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

          
SCROLL FOR NEXT