டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களத்தில் ஃபீல்டிங் பணியை கவனித்துக் கொண்டிருந்த இலங்கை அணி வீரர் குசல் மெண்டிஸ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி வருபவர் குசல் மெண்டிஸ். 27 வயதான அவர் இதுவரையில் 82 ஒருநாள், 48 டெஸ்ட் மற்றும் 32 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளார்.
இன்று டாக்காவில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி டாஸை இழந்து பந்து வீசி வருகிறது. இந்தப் போட்டியின் உணவு நேர இடைவேளைக்கு முன்பாக நெஞ்சு வலி காரணமாக அவர் களத்தில் இருந்து வெளியேறினார்.
திடீரென நிலைகுலைந்து விழுந்த அவர் நெஞ்சை பிடித்தபடி களத்தில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும். அவரை மருத்துவர்கள் பரிசோதித்து வருவதாக வங்கதேச கிரிக்கெட் வாரிய மருத்துவர்கள் மன்சூர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
24 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறிய வங்கதேச அணியை லிட்டன் தாஸ் மற்றும் முஷ்பிகுர் ரஹிம் இணையர் மீட்டுள்ளது. இருவரும் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை நோக்கி விளையாடிக் கொண்டுள்ளனர்.