தோஹா: முதல் முறையாக பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் மகளிரை நடுவர்களாக களம் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (பிஃபா) கத்தார் நாட்டில் கால்பந்து உலகக் கோப்பையை நடத்த உள்ளது. மொத்தம் 32 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன. அணிகள் மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கத்தார் நாட்டில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்கள் இதில் விளையாடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான இந்த தொடரில் முதல் முறையாக மகளிரை நடுவர்களாக நியமித்துள்ளது பிஃபா. இது உலக அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த தொடரில் மூன்று மகளிர் நடுவார்களாகவும், மூன்று மகளிர் துணை நடுவர்களாகவும் பணியாற்ற உள்ளனர். பிரான்ஸ், ருவாண்டா மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் நடுவர்கள் மூவர் இந்த பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணை நடுவர்களாக பிரேசில், மெக்சிகோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த மூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2020 வாக்கில் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் நடுவர் ஸ்டெபானி ஃப்ராப்பார்ட் நியமிக்கப்பட்டார். அவர் இப்போது தேர்வாகி உள்ள மூன்று பெண் நடுவர்களின் ஒருவர் ஆவார்.
இஸ்லாமிய சட்டங்களை தீவிரமாக பின்பற்றி வரும் கத்தார் நாட்டில் மகளிரை நடுவர்களாக நியமித்துள்ளது பிஃபா என்பது குறிப்பிடத்தக்கது.