கொல்கத்தா: ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 157 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய இந்தியாவின் ரவி பிஷ்னோய் அசத்தலாக பந்துவீசி எதிரணியை கட்டுக்குள் கொண்டுவந்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி முழுமையாக 3-0 என கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகள் மூன்று டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் கே.எல்.ராகுல், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. இளம் வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல், ஆவேஷ்கான் ஆகியோர் அணியில் இருந்த நிலையில், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேலுக்கு மட்டும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் பிராண்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் இன்னிங்ஸை துவக்கினர். இருவரும் பேசிவைத்தாரோபோல் ஹிட் மோடில் தொடக்கம் கொடுத்தனர். பிராண்டன் கிங் புவனேஷ்வர் குமார் ஓவரை பவுண்டரியுடன் வெல்கம் செய்தார். அந்த பவுண்டரியை என்ன வேகத்தில் அடித்தோரோ அதே வேகத்தில் புவனேஷ்வர் குமார் ஓவரில் சூர்யாகுமார் யாதவ்விடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் அவுட் ஆனார். இதன்பின் பூரன் களம்புகுந்தார். இவரும், மேயர்ஸும் அடுத்த ஐந்து ஓவர்களுக்கு இந்திய அணியின் பவுலிங்கை துவம்சம் செய்தனர்.
குறிப்பாக, மேயர்ஸ் அடித்தால் பவுண்டரி மட்டுமே என்னும் சொல்லும் அளவுக்கு ஏழு பவுண்டரிகளை அடித்தவர், 24 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் சஹால் பந்துவீச்சில் அவுட் ஆனார். மறுமுனையில் இருந்த பூரனுக்கு அடுத்துவந்த வீரர்களில் பொல்லார்ட் தவிர மற்ற எவரும் பெரிய சப்போர்ட் செய்யவில்லை. இதனால் ஒருபுறம் அறிமுக வீரர் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் விக்கெட் விழுந்து கொண்டிருக்க, மறுபுறம் பூரன் தனது அதிரடியை தொடர்ந்து அரைசதம் கடந்தார்.
18வது ஓவரின் கடைசி பந்தில் பூரனும் 61 ரன்கள் எடுத்தவாறு ஹர்ஷல் படேல் ஓவரில் அவுட் ஆகினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவுக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. கேப்டன் பொல்லார்ட் 24 ரன்கள் எடுத்தவாறு நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்றார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் மற்றும் ஹர்ஷல் படேல் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.