டேவிட் வார்னர் | கோப்புப்படம் 
விளையாட்டு

டேவிட் வார்னருக்கு இந்த சீசனில் இனி வாய்ப்பில்லை: சன்ரைசர்ஸ் பயிற்சியாளர் சூசகம்

ஏஎன்ஐ


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இந்த சீசனில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு இனிமேல் களமிறங்க வாய்ப்புக் கிடைக்காது என பயிற்சியாளர் ட்ரீவோர் பேலிஸ் சூசகமாகத் தெரிவித்தார்.

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 9 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 5 தோல்விகளைச் சந்தித்து வந்த சன்ரைசர்ஸ் அணி 2-வது வெற்றியைப் பெற்றுள்ளது. ப்ளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு சன்ரைசர்ஸ் அணிக்கு முடிந்துவிட்டது என்றாலும், இன்னும் அந்த அணிக்கு 4 போட்டிகள் உள்ளன.

அடுத்துவரும் 4 போட்டிகளும் வலுவான அணிகளுக்கு எதிரானது என்பதால், வெல்வது கடினம். ஆதலால், இனிவரும் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணியில் உள்ள இளம் வீரர்கள், ஒரு போட்டியில்கூட களமிறங்காத வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களின் திறமையை பரிசீலிக்கத் திட்டமிட்டுள்ளது.

சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாள்ர ட்ரிவோர் பேலிஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்த ஐபிஎல் சீசனுக்கு எப்படியும் சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லாது என்பது தெரிந்துவிட்டது. ஆதலால், சன்ரைசர்ஸ் அணியில் உள்ள இளம் வீரர்கள், இதுவரை வாய்ப்புக் கிடைக்காத வீரர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இன்னும் இறுதிமுடிவு எடுக்கவில்லை. இளம் வீரர்களைக் களமிறக்கி அவர்களை அடுத்துவரும் போட்டிகளில் பரிசோதிக்க இருக்கிறோம். அதற்காக அனுபவமான வீரர்கள் அனைவரும் ஹோட்டலில் அமரவைக்கப்படுவார்கள் என்றுஅர்த்தமில்லை.

சன்ரைசர்ஸ் அணியில் ஏராளமான வீரர்கள் இதுவரை களமிறங்காமலயே இருக்கிறார்கள். சிலர் ரிசர்வ் வீரர்களாகவே அணியில் தொடர்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களின் அனுபவத்தை, திறமையை பரிசோதிக்க இருக்கிறோம். அடுத்துவரும் 4 போட்டிகளுக்குத் தொடருமா அல்லது அதன்பின்பும் தொடருமா என்பது என எங்களுக்குத் தெரியாது.

அடுத்துவரும் சில நாட்களில் 18 வீரர்களைக் கொண்ட அணியைத் தேர்வு செய்தபின் அனுபவ வீரர்களை அமரவைப்போம். அதற்கான வேலையில் இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை அடுத்துவரும் போட்டிகளில் வார்னர் பார்வையாளரகவே தொடர்ந்து, இளம் வீரர்களுக்கு வழிகாட்டுவார். இது அனுபவ வீரர்களுக்கும் பொருந்தும். மிகப்பெரிய ஏலம் நடப்பதற்கு முன் இதுதான் கடைசி சீசன். வார்னரைப் பொறுத்தவரை சன்ரைசர்ஸ் அணிக்கு ஏராளமான பங்களிப்புச் செய்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிகமான ரன்களையும் அடித்துள்ளார்

இவ்வாறு பேலிசிஸ் தெரிவி்த்தார்

SCROLL FOR NEXT