விளையாட்டு

3-வது டெஸ்ட்: ஆண்டர்சன் பந்துவீச்சில் முதல் 2 விக்கெட்டுகளை இழந்த இந்தியா

செய்திப்பிரிவு

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் முதல் 2 விக்கெட்டுகளை இந்தியா இழந்துள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் டிரா ஆனதைத் தொடர்ந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 151 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

தற்போது ஹெட்டிங்க்லியின் லீட்ஸ் மைதானத்தில் 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. முதல் இன்னிங்ஸில் அதிக ரன் சேர்ப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று விராட் கோலி கருத்து கூறியுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர்.

முதல் ஓவரின் ஐந்தாவது பந்தைச் சந்தித்த கே.எல்.ராகுல் அதை டிரைவ் செய்ய முற்பட்டார். பந்து சரியாகப் படாமல் பேட்டை உரசிவிட்டு, விக்கெட் கீப்பர் பட்லரிடம் தஞ்சம் புகுந்தது. கடந்த போட்டியில் சதமடித்த கே.எல்.ராகுல் இம்முறை டக் அவுட் ஆகி வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்தது. தொடர்ந்து களமிறங்கிய புஜாராவும் ஐந்தாவது ஓவரில் ஒரே ஒரு ரன் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தற்போது கோலி களமிறங்கியுள்ளார்.

முன்னதாக, இந்தப் போட்டியிலாவது ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஆனால், இந்தப் போட்டியிலும் அஸ்வின் இடம்பெறவில்லை. கடந்த போட்டியில் ஆடிய வீரர்களே இந்தப் போட்டியிலும் தொடர்கின்றனர். இங்கிலாந்து அணியில் புதிதாக டேவிட் மலான் மற்றும் ஓவர்டன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT