ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வென்ற வெண்கலப் பதக்கத்தை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் காண்பித்து மகிழும் பி.வி.சிந்து. படம்: பிடிஐ 
விளையாட்டு

ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்ற சிந்துவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை

செய்திப்பிரிவு

ஜப்பானின் டோக்கியா நகரில் நடைபெறும் 32-வது ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம்வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார். பதக்கத்துடன் சொந்த ஊரான ஹைதராபாத் திரும்பிய சிந்துவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பி.வி.சிந்து நேற்று தனது குடும்பத்தினருடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து வெண்கலப் பதக்கத்தை காண்பித்தார்.

சிந்துவுக்கு முதல்வர் ஜெகன் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இதுபோல் மேலும் பல பதக்கங்கள் வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார். ஆந்திர அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத் தொகைக்கான காசோலையை அதிகாரிகள் வழங்கினர்.

பின்னர் சிந்து கூறும்போது, “ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்கு முன் ஆந்திர முதல்வரை சந்தித்தேன். அப்போது அவர்என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார். பதக்கத்துடன் தாயகம் திரும்ப வேண்டும் என வாழ்த்தினார். அதன்படி வந்து அவரைநான் சந்தித்தேன். விசாகப்பட்டினத்தில் விரைவில் அகாடமி தொடங்குவேன். அதன் மூலம் பலருக்கு பாட்மிண்டன் பயிற்சி அளிப்பேன். ஏற்கெனவே இதற்கான இடத்தை அந்திர அரசு அளித் துள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT