விளையாட்டு

விளையாட்டாய் சில கதைகள்: பந்துவீச்சாளராக மாறிய பேட்ஸ்மேன்

பி.எம்.சுதிர்

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வீரராக கருதப்படுகிறார். 78 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள நிலையில் 409 விக்கெட்களை அவர் கைப்பற்றி இருப்பதே இதற்கு காரணம். முன்னணி பந்துவீச்சாளராக இருப்பதுடன், ஆபத்து நேரங்களில் கைகொடுக்கும் கடைநிலை பேட்ஸ்மேனாகவும் இருக்கும் அஸ்வினைப் பற்றிய சில தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

அஸ்வினின் அப்பா ரவிச்சந்திரனும் ஒரு கிரிக்கெட் வீரர். தெற்கு ரயில்வேயில் வேலை பார்த்த அவர், உள்ளூர் கிளப்களுக்காக சில போட்டிகளில் ஆடியுள்ளார். இதனால் அஸ்வின் கிரிக்கெட் விளையாட விருப்பம் தெரிவித்தபோது பெற்றோர் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் ஊக்கப்படுத்தி உள்ளனர். அதே நேரத்தில் படிப்பையும் விடக்கூடாது என்று அவர்கள் கூறியுள்ளனர். அஸ்வினும் அவரது பெற்றோர் கூறியபடியே கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தாலும், படிப்பையும் விடாமல் இருந்துள்ளார். தகவல் தொழில்நுட்ப பிரிவில் பட்டம் பெற்ற அஸ்வின், சில காலம் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துள்ளார்.

ஆரம்ப கட்டத்தில் அஸ்வின் ஒரு பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். தான் விளையாடும் அணிகளின் தொடக்க ஆட்டக்காரராக இருந்த அவருக்கு 14 வயதில் ஒரு காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் சிறுவயதில் பேட்டிங்கை விட்டு பந்துவீச்சில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பிறகு, தனது சிறுவயது தோழியான ப்ரீத்தியை 2011-ம் ஆண்டு அஸ்வின் மணந்தார். அஸ்வினுக்கு நாய்களை மிகவும் பிடிக்கும்.

கிரிக்கெட் போட்டிகளில் ஆடாமல் சென்னையில் இருக்கும் நாட்களில் தன் வீட்டில் உள்ள நாய்களை வாக்கிங் அழைத்துச் செல்வதை அஸ்வின் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT