மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா தொடங்கப்போகிறது. இந்தப் போட்டிகளுக்கு இடையே எந்தவிதமான சர்வதேச போட்டிகளையும் நடத்தாதீர்கள் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்ஸன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி ஜூன் 2-ம் தேதி நியூஸிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. ஐபிஎல் தொடர் மே 30-ம் தேதி முடிகிறது, ஐபிஎல் முடிந்தவுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்பது இயலுமா என்ற கேள்வி எழுந்தது.
இதனால் இங்கிலாந்து வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து இரட்டை மனநிலையில் இருந்தனர். தேசிய அணிக்காக விளையாடுவதா அல்லது ஐபிஎல் அணிக்காக விளையாடுவதா என்ற நிலைப்பாட்டுடன் இருந்தனர்.
ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து அணியின் மோர்கன், ஜாஸ் பட்லர், ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி, சாம் கரன், டாம் கரன், சாம் பில்லிங்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான் ஆகியோர் பங்கேற்கிறார்கள்
இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்ஸன் ட்விட்டரில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், " இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநரே, ஐபிஎல் போட்டி நடக்கும்போது, இங்கிலாந்து வீரர்களை தேசிய அணிக்கு வருமாறு அழைக்காதீர்கள் என ஆஷ்லே கில்ஸ் ஏற்கெனவே கூறியுள்ளார்.
ஐபிஎல் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் என்பதை இங்கிலாந்து வாரியம் உணர்வது அவசியம். ஐபிஎல் தொடங்க இருப்பதால், எந்தவிதமான சர்வதேச போட்டிக்கான அட்டவணையையும் தயாரிக்காதீர்கள், நடத்தாதீர்கள். எளிமையாகச் சொல்லிவிட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.