விளையாட்டு

ஐபிஎல் தொடருக்கு இன்னும் 7 நாட்கள்... 6-வது முறையாக பட்டம் வெல்லுமா மும்பை?

செய்திப்பிரிவு

பவர் ஹிட்டர்களை உள்ளடக்கிய பேட்டிங் வரிசை, இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்படக்கூடிய பந்து வீச்சாளர்கள் என வழக்கம் போல அசுர பலத்துடன் களமிறங்குகிறது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. எனினும் தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது தொடர்ச்சியாக 3-வது முறையாக பட்டம் வெல்லும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கனவை சிதைக்கக்கூடும். நடப்பு சாம்பியனான மும்பை தனது முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வரும் 9-ம் தேதி எதிர்கொள்கிறது.

பலம்: 2019-ல் சாம்பியன் பட்டம் வென்ற பின்னர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020-ல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்ட தொடரில் மும்பை அணி மீண்டும் மகுடம் சூடியது.

பேட்டிங்கே மும்பையின் பெரியபலம். திடமான தொடக்க ஜோடியாக ரோஹித் சர்மா, குயிண்டன் டி காக் உள்ளனர். தேவைப்பட்டால் மாற்று தொடக்க வீரராக களமிறங்க கிறிஸ் லினும் ஆயத்தமாக உள்ளார். சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோருடன் ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, கிருணல் பாண்டியா, கெய்ரன் பொலார்டு ஆகியோர் நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்துபவர்களாக உள்ளனர்.

பந்து வீச்சு குழுவில் ஜஸ்பிரீத்பும்ரா எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுப்பவராக உள்ளார். கடந்த சீசனில் புதிதாக சேர்க்கப்பட்டிருந்த நியூஸிலாந்தின் டிரெண்ட் போல்ட் தொடக்க ஓவர்களில் விக்கெட்கள் வீழ்த்தி அசத்தியிருந்தார். இவர்களுடன் நேதன் கவுல்டர் நைலின் வேகமும் பலம் சேர்ப்பதாக உள்ளது.

பலவீனம்: சுழற்பந்து வீச்சு அணியின் பிரச்சினையாக திகழக்கூடும். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் மும்பை அணி தனது முதற்கட்ட ஆட்டங்களை விளையாடுகிறது. இதனால் விக்கெட் வீழ்த்தும் சுழற்பந்து வீச்சாளர்இல்லாதது மும்பை அணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கக்கூடும்.

மும்பை ஒரு வலுவான பக்கத்தைக் கொண்டுள்ளது, ஆனால் ஒவ்வொரு இடத்திற்கும் போதுமான மாற்று வீரர்கள் இல்லை. ஒப்பீட்டளவில் இளம் வீரர்களே அவர்களின் பெஞ்ச் பலமாகக் கொண்டுள்ளது.

          
SCROLL FOR NEXT