சிஎஸ்கே ஜெர்சியில் விளையாட எதிர்பார்ப்புடன் உள்ளேன் என்று புஜாரா தெரிவித்துள்ளார்.
2021-ம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான மினி ஏலம் சென்னையில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலில் நடந்து வருகிறது. இதில் 8 அணிகளும் வீரர்களின் பட்டியலை உறுதி செய்து 292 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கச் சம்மதித்தன.
இதில், சென்னையில் நேற்று நடந்த ஏலத்தில், இந்திய டெஸ்ட் அணியின் சுவர் என வர்ணிக்கப்படும் சத்தேஸ்வர் புஜாரா ரூ.50 லட்சம் அடிப்படை விலையில் ஏலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அவரை அதே விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியது.
கடந்த 2014-ம் ஆண்டு கடைசியாக ஐபிஎல் போட்டியில் புஜாரா விளையாடியிருந்தார். அதன்பின் 7 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி, மஞ்சள் ஆடையை அணிய உள்ளார். இந்த நிலையில் புஜாரா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தோனி தலைமையில் சிஎஸ்கே அணியில் இணைந்தது குறித்து புஜாரா வெளியிட்ட வீடியோவில், “ஐபிஎல் போட்டிக்குத் திரும்பியது சிறப்பானதாக உள்ளது. சிஎஸ்கே ஜெர்சியில் விளையாட எதிர்பார்ப்புடன் உள்ளேன். நான் தோனி தலைமையில் மீண்டும் விளையாட இருக்கிறேன். நான் டெஸ்ட் அணியில் அறிமுகமாகும்போது தோனிதான் கேப்டனாக இருந்தார். இந்த நிலையில் அவருடன் மீண்டும் இணைந்து விளையாடுவதில் ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.