கரூரில் புதன்கிழமை தொடங்கிய அகில இந்திய ஆடவர் கூடைப்பந்துப் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை ஐசிஎப் அணி வென்றது.
கரூர் கூடைப்பந்து கழகம் சார்பில் எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 56-வது ஆண்டு அகில இந்திய ஆண்கள் கூடைப்பந்து போட்டி கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது. வரும் 27-ம்
தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.
தொடக்க விழாவுக்கு கரூர் வைஸ்யா வங்கி முன்னாள் தலைவர் ஏ.எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். கரூர் கூடைப்பந்து கழகத் தலைவர் வி.என்.சி.பாஸ்கர் வரவேற்றார். கரூர் நகர்மன்ற தலைவர் எம்.செல்வராஜ் போட்டியைத் தொடங்கி வைத்தார்.
முதல் ஆட்டத்தில் சென்னை ஐசிஎப் மற்றும் வாரணாசி டிஎல்டபிள்யு அணிகள் மோதின. இதில் 60- 57 புள்ளிகள் கணக்கில் ஐசிஎப் அணி வெற்றி பெற்றது.