சிட்னியில் நேற்று நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் பந்துவீசுவதற்கு அதிகமான நேரத்தை இந்திய அணி எடுத்துக் கொண்டதையடுத்து, 20 சதவீதம் அபராதம் விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உத்தரவிட்டுள்ளது.
சிட்னியில் நேற்று நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திேரலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் சேர்த்தது. 375 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் 50 ஓவர்களை வீசுவதற்கு இந்திய அணி 4 மணிநேரம் 6 நிமிடங்களை எடுத்துக் கொண்டது. அதாவது ஆஸ்திரேலிய நேரப்படி இந்த போட்டி இரவு 11.40 மணிக்குத்தான் முடிந்தது.
இது ஐசிசி நிர்ணயித்த காலக்கெடுவுக்கும் அதிகமான நேரத்தை பந்துவீச இந்திய அணியினர் எடுத்துக்கொண்டனர்.
இதையடுத்து ஐசிசி போட்டி நடுவர் டேவிட் பூன், இந்திய அணி பேட்டிங் செய்தபோது ஒரு ஓவரைக் குறைத்தும், அபராதம் விதித்தும் பரிந்துரைத்தார்.
இதுகுறித்து ஐசிசி இன்று வெளியிட்ட அறிவிப்பில் “ வீரர்கள், மற்றும் வீரர்கள் உதவியாளர்களுக்கான ஐசிசி ஒழுங்கு விதிகள்படி, பந்துவீசுவதற்கு வழங்கப்பட்ட குறிப்பிட்ட கால அவகாசத்தைவிட அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டல் போட்டித் தொகையிலிருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். அதன்படி, இந்திய அணியினர் பந்துவீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதால், அவர்களுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது.
பந்துவீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்ட குற்றத்துக்கு கேப்டன் விராட் கோலி, நேரடியாக விசாரணைக்கு வர வேண்டும். கள நடுவர்கள் ராட் டக்கர், சாம் நோகாஜி, டிவி நடுவர் பால் ரீபல், 4-வது நடுவர் ஜெரார்ட் அபூத் ஆகியோரும் இந்திய அணி பந்துவீச அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதாகத் குற்றம்சாட்டியுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டி குறித்கு ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் “ எனக்குத் தெரிந்தவரை 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் அதிகமான நேரம் களத்தில் இருந்தது இந்த போட்டியாகத்தான் இருக்கும். எந்த மாற்றமும் இல்லை. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியினர் பந்தவீசுதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டனர். அதாவது கூடுதலாக 45 நிமிடங்களை எடுத்துக்கொண்டனர். அதேபோல, நாங்களும் சிறிது நேரம் எடுத்துக்கொண்டோம்” எனத் தெரிவித்தார்.