அரை சதம் கடந்த டேவிட் வார்னர் - படம்: ஸ்போர்ட்ஸ்டார் 
விளையாட்டு

முதல் ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி சிறப்பான ஆட்டம்

செய்திப்பிரிவு

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஒருநாள், டி20, டெஸ்ட் என அடுத்தடுத்துத் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் தொடரில் முதலில் ஒரு நாள் தொடர் நடக்கிறது.

இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு ஆரம்பித்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்து ஆடி வருகிறது. தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் ஃபின்ச் என இருவரும் ஆரம்பத்தில் மெதுவாக, நிலையாக ஆடி பின் ரன் சேர்ப்பில் வேகமெடுத்தனர்.

இந்திய அணியில் ஷமி மற்றும் பும்ரா தொடக்க ஓவர்களை வீசினர். இதில் ஷமி சிறப்பாக வீச, பும்ராவின் வேகம் பேட்ஸ்மேனை மிரட்டினாலும் அவரால் ரன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. பின் நவ்தீப் சைனி வீச வந்தார். அவர் பங்குக்கும் ரன்கள் வழங்க ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் வேகமாக ஏற ஆரம்பித்தது.

அடுத்தடுத்து சஹல், ரவீந்திர ஜடேஜா என எந்த மாற்றமும் இதுவரை எடுபடவில்லை. தற்போதைய நிலவரப்படி 27 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 149 ரன்களை ஆஸ்திரேலியா சேர்த்துள்ளது. தொடக்க வீரர்கள் இருவருமே அரை சதம் கடந்துள்ளனர். வார்னர் 63 ரன்களிலும், ஃபின்ச் 72 ரன்களிலும் ஆடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT